Published : 13 Jan 2021 03:14 AM
Last Updated : 13 Jan 2021 03:14 AM

ரயிலில் தூங்கிய பெண்ணுக்கு பாலியல் கொடுமை: குரோம்பேட்டையில் ரயில் பயணிகள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

ரயிலில் தூங்கிய பெண்ணுக்கு பாலியல் கொடுமை இழைக்கப்பட்ட சம்பவத்தை கண்டித்தும், பாதிக்கப்பட்டவருக்கு நிவாரணம் வழங்க வலியுறுத்தியும் ரயில் பயணிகள் சங்கம் சார்பில் நேற்று குரோம்பேட்டையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

சென்னை பல்லாவரத்தை சேர்ந்தவர் 40 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் கடந்த 8-ம் தேதி இரவு செங்கல்பட்டு செல்லும் ரயிலில் தூங்கிவிட்ட நிலையில், நள்ளிரவு ஆகிவிட்டதால் சேவை முடிந்த பிறகு அந்த ரயில் பணிமனைக்கு சென்றது. அப்போது, ரயிலிலை சுத்தம் செய்ய வந்த 2 ஒப்பந்தப் பணியாளர்கள், பெண்ணை மிரட்டி பாலியல் கொடுமை இழைத்தனர். அந்த பெண் அளித்த புகாரின் பேரில், தாம்பரம் ரயில்வே போலீஸார் வழக்குப்பதிவு செய்து இருவரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

இந்நிலையில் நேற்று குரோம்பேட்டை ரயில் பயணிகள் சங்கம் சார்பில் குரோம்பேட்டை ரயில் நிலைய நடை மேம்பாலத்தில் சங்கத் தலைவர் வி.சந்தானம் தலைமையில் முழக்கப் போராட்டம் நடைபெற்றது. பின்னர் கோரிக்கை அடங்கிய மனுவை ரயில்வே அதிகாரிகளிடம் அளித்தனர்.

ரயில் பயணியர் சங்க தலைவர் சந்தானம் கூறும்போது, “பாலியல் கொடுமை இழைக்கப்பட்ட பெண்ணுக்கு நஷ்டஈடும், வேலையும் வழங்க வேண்டும். ரயில்ஷெட்டுக்கு போகும் முன்பு பெட்டிகளை சோதனை செய்யவேண்டும்.

பெண்கள் பெட்டியில் பெண் போலீஸை பணியில் நியமிக்க வேண்டும். சிசிடிவி கேமராக்களை அனைத்து ரயில் நிலையங்களிலும் பொருத்த வேண்டும். இரவு 10 மணிக்கு மேல் மும்பையில் இருப்பது போல ஆண்கள் பெட்டியில் பயணிக்கச் செய்ய வேண்டும்.

போதுமான ரயில்வே போலீஸை அனைத்து ரயில்களிலும் நியமிக்க வேண்டும். பயணிகள் பாதுகாப்பாக பயணிக்க எல்லா பாதுகாப்பு நடவடிக்கைகளையும் எடுக்க வேண்டும்” என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x