

சிவகங்கை மாவட்டம் இளையான்குடி அருகே மினிகிளினிக் திறப்பு விழாவில் திடீர் மின்தடை ஏற்பட்டது. காத்திருந்தும் வராததால் மொபைல் போன் டார்ச் வெளிச்சத்தில் அமைச்சர் ஜி.பாஸ்கரன் பேசினார்.
இளையான்குடி அருகே விசவனூரில் மினி கிளினிக் திறப்பு நேற்று மாலை நடந்தது. மாவட்ட ஆட்சியர் பி.மதுசூதன் ரெட்டி தலைமை வகித்தார். கதர்கிராமத் தொழில்கள் நலவாரியத்துறை அமைச்சர் ஜி.பாஸ்கரன் திறந்து வைத்தார்.
பிறகு மாவட்ட ஆட்சியர், எம்எல்ஏ நாகராஜன் பேசினார். தொடர்ந்து மாவட்ட ஊராட்சித் தலைவர் பொன்.மணிபாஸ்கரன் பேசிக்கொண்டிருந்தபோது திடீரென மின்தடை ஏற்பட்டது. இதனால் மைக் எடுக்கவில்லை.
பொன்.மணிபாஸ்கரன் பேசி முடித்ததும், மின்சாரத்திற்காக அமைச்சர் காத்திருந்தார். அங்கிருந்த அதிகாரிகளும் உடனே மின்சாரம் வந்துவிடும் என்றனர். ஆனால் 10 நிமிடங்கள் காத்திருந்தும் மின்சாரம் வராததால் மொபைல் போன் டார்ச் வெளிச்சத்தில் அமைச்சர் பேசினார்.
மைக் எடுக்காததால் விழாவில் பங்கேற்ற பலருக்கும் அமைச்சர் பேசியது கேட்கவில்லை. அமைச்சர் 20 நிமிடங்கள் பேசும்வரை மின்சாரம் வரவில்லை. இதனால் அதிருப்தியுடன் அங்கிருந்து புறப்பட்டு சென்றார்.