Last Updated : 12 Jan, 2021 05:17 PM

 

Published : 12 Jan 2021 05:17 PM
Last Updated : 12 Jan 2021 05:17 PM

நெல்லை மாவட்டத்தில் பெய்துவரும் மழையால் தாமிரபரணியில் வெள்ளப் பெருக்கு நீடிப்பு

திருநெல்வேலி மாவட்டத்தில் மழை நீடிக்கும் நிலையில் தாமிரபரணியில் தொடர்ந்து இன்றும் வெள்ளப்பெருக்கு காணப்பட்டது.

143 அடி உச்சநீர்மட்டம் கொண்ட பாபநாசம் அணை நீர்மட்டம் 142.15 அடியாக இருந்தது. அணைக்கு வினாடிக்கு 2465.63 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருந்தது.

அணையிலிருந்து வினாடிக்கு 2360.18 கனஅடி தண்ணீர் திறந்துவிடப்பட்டிருந்தது. 118 அடி உச்சநீர்மட்டம் கொண்ட மணிமுத்தாறு அணை நீர்மட்டம் 117.50 அடியாக இருந்தது. அணைக்கு வினாடிக்கு 3161 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருந்தது.

அணையிலிருந்து 3149 கனஅடி தண்ணீர் திறந்துவிடப்பட்டிருந்தது. மற்ற அணைகளின் நீர்மட்டம்: சேர்வலாறு- 141.73 அடி, வடக்கு பச்சையாறு- 33.50 அடி, நம்பியாறு- 10.62 அடி, கொடுமுடியாறு- 27.75 அடி.

பாபநாசம், மணிமுத்தாறு அணைகள் நிரம்பியிருக்கும் நிலையில் இந்த அணைகளின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்துவரும் மழையால் அணைகளுக்கு நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

இந்தத் தண்ணீர் தாமிரபரணி ஆற்றில் உபரியாக திறந்துவிடப்படுகிறது. இதனால் தாமிரபரணி ஆற்றில் வெள்ளம் கரைபுரள்கிறது. இதனிடையே மணிமுத்தாறு அணைப்பகுதிகளில் மாவட்ட ஆட்சியர் விஷ்ணு இன்று ஆய்வு மேற்கொண்டார்.

மாவட்டத்தில் அணைப்பகுதிகள் மற்றும் பிறஇடங்களில் நேற்று காலை 8 மணிநிலவரப்படி பெய்த மழையளவு (மி.மீட்டரில்):

பாபநாசம்- 25, சேர்வலாறு- 16, மணிமுத்தாறு- 39.4, நம்பியாறு- 10, கொடுமுடியாறு- 14, அம்பாசமுத்திரம்- 29, சேரன்மகாதேவி- 20.20, நாங்குநேரி- 13, ராதாபுரம்- 11, பாளையங்கோட்டை- 11, திருநெல்வேலி- 8.20.

காவல்துறை எச்சரிக்கை:

தொடர் மழையை அடுத்து திருநெல்வேலி மாவட்ட காவல்துறை விடுத்துள்ள எச்சரிக்கை:

தொடர் மழை காரணமாக மணிமுத்தாறு அணை நிரம்பியுள்ளதால் அணை திறக்கப்பட்டு தாமிரபரணி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

எனவே ஆற்றின் கரையோரம் மற்றும் அதை சுற்றியுள்ள கிராமத்தினர் ஆற்றுப்பக்கம் குளிக்க செல்ல வேண்டாம். மேலும் கால்நடைகளையும் ஆற்றின்பக்கம் அழைத்துச் செல்ல வேண்டாம்.

பெற்றோர் தங்கள் பிள்ளைகளை ஆற்றில் குளிக்கவோ, வேடிக்கை பார்க்கவோ செல்ல அனுமதிக்க கூடாது. தாமிரபரணியின் குறுக்கேயுள்ள பாலங்களில் நின்று செல்பி எடுக்கவோ, புகைப்படம் எடுக்கவோ கூடாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

திருநெல்வேலி குறுக்குத்துறை முருகன் கோயிலை வெள்ளம் சூழ்ந்துள்ளதால் கோயில் நடை சாத்தப்பட்டு, உற்சவர் சிலைகள் மேல்கோயிலுக்கு எடுத்துச் செல்லப்பட்டு பூஜைகள் நடைபெற்று வருகின்றன.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x