Published : 12 Jan 2021 03:13 AM
Last Updated : 12 Jan 2021 03:13 AM

நெல்லை, தூத்துக்குடி உள்ளிட்ட 7 மாவட்டங்களில் இன்று மிக கனமழை பெய்ய வாய்ப்பு

தமிழகத்தில் தென் மாவட்டங்களில் இன்று பரவலாக மழை பெய்ய வாய்ப்புள்ளது. மேலும் திருநெல்வேலி, தூத்துக்குடி, ராமநாதபுரம், விருதுநகர், தேனி, திண்டுக்கல், கன்னியாகுமரி ஆகிய 7 மாவட்டங்களில் மிக கனமழை பெய்யக் கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் நா.புவியரசன் நேற்று செய்தியாளர்களிடம் கூறியதாவது:

இலங்கை மற்றும் குமரிக் கடல் பகுதியை ஒட்டி வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. அதன் காரணமாக 12-ம்தேதி தென் தமிழகத்தில் பெரும்பாலான இடங்களில் மிதமான மழை பெய்யக் கூடும். நெல்லை,தூத்துக்குடி, ராமநாதபுரம், விருதுநகர், தேனி, திண்டுக்கல், கன்னியாகுமரி ஆகிய 7 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் மிகக் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. மேலும் மதுரை, புதுக்கோட்டை, சிவகங்கை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன மழை பெய்யக் கூடும்.இதர மாவட்டங்களில் மிதமான மழை பெய்யும்.

13-ம் தேதி தென் தமிழகத்தில் ஒருசில இடங்களில் மிதமான மழையும், நெல்லை, தூத்துக்குடி ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன மழையும் பெய்யக் கூடும். அதேபோல், 14, 15-ம் தேதிகளில் தென் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.

சென்னை, புறநகர் பகுதிகளில்வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் லேசான மழை பெய்யக் கூடும்.

11-ம் தேதி காலை 8.30 மணியுடன் நிறைவடைந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக கடலூர்மாவட்டம் புவனகிரியில் 11 செமீ,பரங்கிப்பேட்டையில் 9 செமீ, ராமநாதபுரம், திருவாரூர் மாவட்டம்குடவாசல் ஆகிய இடங்களில் தலா 6 செமீ மழை பதிவாகியுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x