அக்குபஞ்சர் முறையில் பிரசவம் பார்க்க முயற்சி: செவிலியர் பயிற்சி பெற்ற கர்ப்பிணி, குழந்தை உயிரிழப்பு

அக்குபஞ்சர் முறையில் பிரசவம் பார்க்க முயற்சி: செவிலியர் பயிற்சி பெற்ற கர்ப்பிணி, குழந்தை உயிரிழப்பு
Updated on
1 min read

பெரம்பலூர் அருகே அக்குபஞ்சர் முறையில் பிரசவம் பார்க்க முயற்சித்தபோது செவிலியர் பயிற்சி பெற்ற கர்ப்பிணி, குழந்தை உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

பெரம்பலூர் மாவட்டம்வேப்பந்தட்டை வட்டம் பூலாம்பாடியைச் சேர்ந்தவர் விஜயவர்மன். இவரது மனைவி அழகம்மாள்(29). செவிலியர் பயிற்சி பெற்றவர். நிறைமாத கர்ப்பிணியாக இருந்த இவருக்கு நேற்று முன்தினம் இரவு பிரசவ வலி ஏற்பட்டது. இதையடுத்து அவரது கணவர் விஜயவர்மன், அக்குபஞ்சர் முறையில் வீட்டிலேயே பிரசவம் பார்த்ததாகக் கூறப்படுகிறது.

அப்போது, அழகம்மாளுக்கு ரத்தப்போக்கு அதிகரித்து, மூச்சுத் திணறல் ஏற்பட்டது. இதையடுத்து, உயிருக்கு ஆபத்தான நிலையில் பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு அழகம்மாளுக்கு 5 பேர் கொண்ட மருத்துவக்குழுவினர் சிகிச்சை அளித்தனர். பின்னர், வயிற்றிலேயே இறந்த நிலையில் இருந்த குழந்தையின் உடல் வெளியே எடுக்கப்பட்டது.

அதன்பின், அழகம்மாளுக்கு உடல்நிலை மேலும் மோசமானதால், மேல் சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். ஆனால், செல்லும் வழியிலேயே அழகம்மாள் உயிரிழந்தார்.

தாயும், சேயும் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. இச்சம்பவம் குறித்து சுகாதாரக் குழுவினர் விசாரித்து வருகின்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in