Last Updated : 11 Jan, 2021 03:25 AM

 

Published : 11 Jan 2021 03:25 AM
Last Updated : 11 Jan 2021 03:25 AM

9 மாதங்களுக்கு பிறகு மீண்டும் வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயம் திறப்பு: சுற்றுலா பயணிகளுக்கு கட்டுப்பாடுகள்

கரோனா அச்சத்தால் மூடப்பட்டிருந்த வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயம், 9 மாதங்களுக்கு பிறகு பல்வேறு கட்டுப்பாடுகளுடன் சுற்றுலா பயணிகளின் பார்வைக்கு நேற்று முதல் திறக்கப்பட்டுள்ளது.

செங்கல்பட்டு மாவட்டம், வேடந்தாங்கல் கிராமத்தில் பொதுப்பணித் துறை கட்டுப்பாட்டில் 73 ஏக்கர் பரப்பளவு கொண்ட ஏரியில் பறவைகள் சரணாலயம் அமைந்துள்ளது. இங்கு, உள்ளூர் மற்றும் வெளிநாடுகளைச்சேர்ந்த ஏராளமான பறவைகள் இனப்பெருக்கத்துக்காக ஆண்டுதோறும் வருவதால், அக்டோபர் அல்லது நவம்பர் மாதங்களில் சீசன் தொடங்கும்.

பறவைகள் ஏரியில் உள்ள மரங்கிளைகளில் கூடுகட்டி முட்டையிட்டு, இனப்பெருக்கம் செய்து, குஞ்சுகளுடன் மீண்டும் தாய்நாடு திரும்பும். பறவைகளைக் கண்டு ரசிப்பதற்காக சுற்றுலா பயணிகள், பள்ளி, கல்லூரி மாணவர்கள், பறவை ஆர்வலர்கள் என ஏராளமானோர் இங்கு வந்து செல்கின்றனர்.

இந்நிலையில், கரோனா அச்சத்தால்கடந்த மார்ச் மாதம் வேடந் தாங்கல் பறவைகள் சரணாலயம் மூடப்பட்டது. பின்னர், தமிழகஅரசு படிப்படியாக பல்வேறு தளர்வுகளைவழங்கியது. எனினும், பறவைகள் சரணாலயத்தை திறக்க அனுமதிக்கவில்லை. பருவமழைக்கால தொடக்கத்தில் இந்த ஏரியில் போதிய தண்ணீர் இல்லாததால் பறவைகள் அருகில் உள்ள நீர்நிலைகளில் தஞ்சமடைந்தன. பின்னர், பெய்த கனமழையால், ஏரி முழு கொள்ளளவை எட்டியது. இதையடுத்து, சிறிது, சிறிதாக சரணாலய ஏரிக்கு வலசை பறவைகள் வந்தன.

இந்நிலையில், பறவைகள் சரணாலயத்தில் தங்கியுள்ள பறவைகளை சுற்றுலா பயணிகள் பார்ப்பதற்காக நேற்று முதல் சரணாலயம் திறக்கப்பட்டுள்ளது. இதனால், சுற்றுலா பயணிகளை நம்பியுள்ள தங்களின் வாழ்வாதாரம் மீளும் என உள்ளூர் கிராம மக்கள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.

வேடந்தாங்கல் சரணாலய வனச்சரகர்சுப்பையா கூறும்போது, “தற்போது, சரணாலயத்தில் 16 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பறவைகள் தங்கியுள்ளன. தமிழக அரசின் வழிகாட்டு நெறிமுறைளை பின்பற்றி சரணாலயம் திறக்கப்பட்டுள்ளது.

சரணாலயத்தின் உள்ளே ஒரு மணிநேரத்துக்கு 600 பேர் வரை அனுமதிக்கப்படுவர். ஏற்கெனவே உள்ளே சென்று வெளியேறுபவர்களின் எண்ணிக்கையை கண்காணித்து மீண்டும் சுற்றுலா பயணிகள் அனுமதிக்கப்படுவர். மக்கள் முகக் கவசம்அணிந்து, கைகளை கழுவுதல், சமூக இடைவெளி உள்ளிட்ட பாதுகாப்பு நடவடிக்கைகளை கட்டாயம் பின்பற்ற வேண்டும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x