Published : 10 Jan 2021 05:46 PM
Last Updated : 10 Jan 2021 05:46 PM

தமிழக மீனவர்கள் மீது சிங்களக் கடற்படை கொடிய தாக்குதல்: ராமதாஸ் கண்டனம்

இந்திய இறையாண்மைக்கு எதிரான சிங்களக் கடற்படையினரின் இத்தகைய அத்துமீறல்களை கடலோரக் காவல்படை வேடிக்கை பார்த்துக் கொண்டிருப்பது மிகவும் கவலையளிக்கிறது என்று பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக இன்று அவர் வெளியிட்ட அறிக்கை:

''வங்கக்கடலில் கச்சத்தீவை ஒட்டிய பகுதியில் மீன்பிடித்துக் கொண்டிருந்த தமிழக மீனவர்கள் மீது சிங்களப்படையினர் கற்களை வீசித் தாக்கியதுடன், 9 மீனவர்களையும் கைது செய்திருப்பதாக வெளியாகி உள்ள செய்திகள் அதிர்ச்சி அளிக்கின்றன. பன்னாட்டு விதிகளுக்கு எதிராக தமிழக மீனவர்கள் மீது சிங்களக் கடற்படையினர் தாக்குதல் நடத்துவதும், படகுகளைச் சிறைப்பிடிப்பதும் கண்டிக்கத்தக்கவை.

ராமேசுவரம், தங்கச்சிமடம் மற்றும் அதையொட்டியுள்ள பகுதிகளைச் சேர்ந்த 2 ஆயிரத்திற்கும் கூடுதலான மீனவர்கள் 300க்கும் மேற்பட்ட படகுகளில் சென்று கச்சத்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்தனர். கச்சத்தீவு பகுதியில் நேற்று நள்ளிரவு மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது, அங்கு பத்துக்கும் கூடுதலான படகுகளில் வந்த சிங்களக் கடற்படையினர், தமிழக மீனவர்கள் மீது சரமாரியாகக் கற்களை வீசித் தாக்கினார்கள். சிங்களப் படையினரின் தாக்குதலுக்கு அஞ்சி, மீனவர்கள் கரைக்குத் திரும்ப முயன்றபோது, அவர்களை வழிமறித்துத் தாக்கினார்கள். மீனவர்கள் கடலில் விரித்திருத்த வலைகளை அறுத்து வீசியுள்ளனர். அதுமட்டுமின்றி, கிருபை என்பவரின் படகைச் சிறைப்பிடித்த சிங்களக் கடற்படையினர், அதிலிருந்த 9 மீனவர்களைக் கைது செய்து தலைமன்னாருக்கு அழைத்துச் சென்றுள்ளனர்.

தமிழக மீனவர்கள் மீதான தாக்குதலும், சிறைப்பிடிப்பும் இந்தியக் கடல் எல்லைக்குள்தான் நடந்துள்ளன. சிங்களக் கடற்படையினர் இந்திய எல்லைக்குள் அத்துமீறி நுழைந்துதான் இக்கொடிய தாக்குதலை நடத்தியுள்ளனர். இந்திய இறையாண்மைக்கு எதிரான சிங்களக் கடற்படையினரின் இத்தகைய அத்துமீறல்களை கடலோரக் காவல்படை வேடிக்கை பார்த்துக் கொண்டிருப்பது மிகவும் கவலையளிக்கிறது.

இந்தியா - இலங்கை இடையே செய்து கொள்ளப்பட்டுள்ள இருதரப்பு ஒப்பந்தத்தின்படியும், பன்னாட்டு விதிகளின்படியும் இந்திய மீனவர்களை இலங்கைக் கடற்படையோ, இலங்கை மீனவர்களை இந்தியக் கடலோரக் காவல்படையோ கைது செய்தால் அவர்களை உடல்ரீதியிலான துன்புறுத்தல்களோ, பொருளாதார இழப்புகளோ ஏற்படுத்தாமல் உள்ளூர் காவல்துறையினரிடம் ஒப்படைக்க வேண்டும்; அவர்கள் இதுகுறித்த தகவல்களை கைது செய்யப்பட்ட மீனவர்களின் நாடுகளின் தூதரகங்களுக்குத் தெரிவிக்க வேண்டும்; சம்பந்தப்பட்ட நாடுகளின் அரசுகளுடன் பேச்சுவார்த்தை நடத்திய பிறகு மீனவர்களை விடுவிக்க வேண்டும். பன்னாட்டு அளவிலும் இத்தகைய நடைமுறைதான் காலம் காலமாகக் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.

ஆனால், இலங்கைப் படையினர் இவற்றில் எந்த விதிமுறைகளையும் கடைப்பிடிக்காமல், இந்தியக் கடல் எல்லைக்குள் அத்துமீறி நுழைத்து மீனவர்களைத் தாக்குவதும், கைது செய்வதும் இந்தியாவின் இறையாண்மைக்கு விடப்படும் சவாலாகும். இதை இந்திய அரசு இனியும் அனுமதிக்கக் கூடாது. அதிலும் குறிப்பாக வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் இலங்கைக்கு அரசுமுறை பயணம் மேற்கொண்டு திரும்பிய 24 மணி நேரத்தில் இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

கடந்த சில நாட்களில் மட்டும் தமிழக மீனவர்கள் 40 பேரைக் கைது செய்துள்ள சிங்களப்படையினர், 6 படகுகளையும் பறிமுதல் செய்துள்ளனர். உடனடியாக இலங்கை அரசுடன் மத்திய அரசு பேச்சுவார்த்தை நடத்தி இதுவரை கைது செய்யப்பட்டுள்ள தமிழக மீனவர்கள் அனைவரையும் விடுதலை செய்யவும், பறிமுதல் செய்யப்பட்ட படகுகள் அனைத்தையும் மீட்டு வரவும் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்''.

இவ்வாறு ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x