Published : 10 Jan 2021 02:16 PM
Last Updated : 10 Jan 2021 02:16 PM

காரைக்குடி பகுதியில் இரண்டாம் பருவம் முடிந்தபிறகு பாடப் புத்தகங்கள் விநியோகம்: பள்ளி மாணவர்கள் அதிருப்தி

காரைக்குடி

காரைக்குடி பகுதியில் இரண்டாம் பருவம் முடிந்தபிறகு பாடப் புத்தகங்கள் விநியோகம் செய்யப்பட்டதால் மாணவர்கள் அதிருப்தி அடைந்தனர்.
கரோனாவால் தமிழகம் முழுவதும் பள்ளிகள் மூடப்பட்டுள்ளன. இதை யடுத்து ஒன்று முதல் 10-ம் வகுப்பு மாணவர்களுக்கு கல்வி தொலைக்காட்சி, பொதிகை உள்ளிட்டவை மூலமும், பிளஸ் 1, பிளஸ் 2 மாணவர்களுக்கு அரசு மடிக்கணினி மூலமும் பாடம் நடத்தப் படுகிறது.

இலவச பாடப்புத்தகங்கள் பிளஸ் 2, 10-ம் வகுப்பு மாணவர்களுக்கு கடந்த ஜூலையிலும், அதைத் தொடர்ந்து மற்ற வகுப்புகளுக்கும் வழங்கப்பட்டன. இதில் ஒன்று முதல் 8-ம் வகுப்பு வரை முப்பருவக் கல்வி என்பதால் பருவம் வாரியாகப் புத்தகங்கள் வழங்கப் படுகின்றன. அவ்வகுப்புகளுக்கு டிசம்பருடன் 2-ம் பருவம் முடிவடைந்தது. ஆனால் சிவகங்கை மாவட்டம், சாக்கோட்டை வட்டாரத்துக்கு உட்பட்ட காரைக்குடி பகுதியில் 2-ம் பருவ புத்தகம் வழங்கவில்லை. இதற்கிடையில் கடந்த மாதம் மயிலாடுதுறையில் பழைய இரும்புக் கடையில் பாடப்புத்தகங்களை எடைக்கு விற்றதாகப் புகார் எழுந்தது. இதில் இருவர் கைது செய்யப்பட்டனர்.

இதையடுத்து தற்போது காரைக்குடி பகுதியில் பள்ளி மாணவர்களுக்கு பாடப்புத்தகங்கள் விநியோகிக்கப்பட்டு வருகிறது.இதுகுறித்து அரசு பள்ளி தலைமைஆசிரியர் ஒருவர் கூறுகையில், ‘இரண்டாம் பருவம் முடிந்தபிறகு பாடப்புத்தகங்களை விநியோகம் செய்கின்றனர். அதுவும் பல பள்ளிகளுக்கு வழங்கவில்லை. மூன்றாம் பருவம் தொடங்கியநிலையில் இதுவரை அதற்குரிய பாடப்புத்தகங்களும் வழங்கவில்லை. இதனால் அரசு மற்றும் உதவி பெறும் பள்ளி மாணவர்கள் சிரமப்படுகின்றனர்,’ என்று கூறினார்.

இதுகுறித்து கல்வித்துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், ‘ தாமதமாக தான் வந்தது. தொடர் மழையால் விநியோகிக்க முடியவில்லை. இதனால் மூன்றாம் பருவப் புத்தகத்துடன் சேர்த்து கொடுக்கிறோம்,’ என்று கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x