Published : 10 Jan 2021 01:49 PM
Last Updated : 10 Jan 2021 01:49 PM

பழநியில் 152 ஆண்டுகள் பழமை வாய்ந்த செப்பேடு: கோயிலில் நித்ய பூஜை செய்ய எழுதிக் கொடுத்தது

பழநியில் கண்டுபிடிக்கப்பட்ட 152 ஆண்டுகள் பழைமை வாய்ந்த செப்பேடு.

பழநி

பழனி தண்டாயுதபாணி சுவாமி கோயிலுக்கு தினமும் நித்ய பூஜை செய்வதற்காக கந்தசாமி பண்டாரம் என்பருக்கு எழுதிக் கொடுத்த 152 ஆண்டுகள் பழமை வாய்ந்த செப்பேடு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

பழனியில் பரமேஸ்வரன் என்பவர் வைத்திருந்த செப்பேடு குறித்து தொல்லியல் ஆய்வாளர் நாராயணமூர்த்தி மற்றும் ஞானசேகரன் ஆய்வு செய்தனர். இது குறித்து நாராயணமூர்த்தி கூறியதாவது:

உடுமலைப்பேட்டையைச் சேர்ந்த வெள்ளாளக் கவுண்டர் சமூகத்தினரால் செப்பேடு எழுதப்பட்டுள்ளது. பழனி தண்டாயுதபாணி சுவாமிக்கு நித்ய பூஜை செய்வதற்காக கந்தசாமி பண்டாரம் என்பவருக்கு எழுதிக் கொடுத்ததாகவும், தண்டாயுதபாணி சுவாமிக்கு தினமும் திருமஞ்சனக் குடம் எடுத்து 120 வில்வ இலை, ஒரு கிண்ணம் சந்தனம், விபூதி ஆகியவற்றால் பூஜை செய்து நெய்வேத்தியம் செய்வதற்குக் கூலியாக, நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் இணைந்து அரை ரூபாய் முதல் இரண்டரை ரூபாய் வரை திரட்டி ஆண்டுக்கு ரூ.115 கூலியாக வழங்கத் தீர்மானித்து எழுதப்பட்டுள்ளது.

இந்த செப்பேடு 1868-ம் ஆண்டு, ஆகஸ்ட் மாதம் 28-ம் நாள் எழுதப்பட்டுள்ளது. 152 ஆண்டுகள் முந்தைய இந்த செப்பேடு 25 செ.மீ. அகலம், 45 செ.மீ. உயரம், 2 கிலோ எடை கொண்டதாக உள்ளது. செப்பேட்டில் வேல், சூரியன், சந்திரன் ஆகிய உருவங்கள் பொறிக்கப்பட்டுள்ளன. சிவமயம் தண்டாயுதபாணி துணை எனத் தொடங்கி வைகை நீடுக மாமழை என்ற பாடலுடன் 106 வரிகள் செப்பேட்டில் உள்ளன. இந்த செப்பேட்டின்படி தண்டாயுதபாணி சுவாமிக்கு பூஜை செய்ய அறை, மடத்தை பயன்படுத்திக் கொள்ள கந்தசாமி பண்டாரத்துக்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. மேலும் இந்த கோயிலுக்கு நன்மை செய்பவர்கள் கங்கை, சண்முக நதியில் பூஜை செய்வதற்கு சமம் என்று குறிப்பிடப்பட்டுள்ளது என்றார்.

கந்தசாமி பண்டாரத்தின் ஐந்தாவது தலைமுறையினரான பரமேஸ்வரன் என்பவரிடம் செப்பேடு தற்போது உள்ளது. ஆய்வின்போது தொல்லியல் ஆய்வு மாணவர்கள் திருவேங்கடம், அஜய் கிருஷ்ணன், பிரசன்னா ஆகியோர் உடன் இருந்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x