Published : 10 Jan 2021 10:51 AM
Last Updated : 10 Jan 2021 10:51 AM

முதுகலை சட்டப் படிப்புக்கு நுழைவுத் தேர்வா?- வைகோ கண்டனம்

முதுநிலை சட்டப் படிப்பிற்கு நுழைவுத் தேர்வு நடத்த முயல்வது ஏற்கத்தக்கது அல்ல. எனவே இந்திய பார் கவுன்சில் தனது அறிவிப்பை உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும் என்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோ வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக இன்று அவர் வெளியிட்ட அறிக்கை:

''மருத்துவப் படிப்புகளுக்கு தேசிய தகுதிகாண் நுழைவுத் தேர்வு ‘நீட்’ புகுத்தப்பட்டு, கிராமப்புற மாணவர்கள், பட்டியல் இன, பிற்படுத்தப்பட்ட, பழங்குடி மாணவர்களின் மருத்துவக் கனவைக் கானல் நீராக்கிய மத்திய பாஜக அரசு, தற்போது சட்டக் கல்வியிலும் சமூக நீதியை ஒழிக்க முதல் அடியை எடுத்து வைத்துள்ளது.

“முதுகலை சட்டப் படிப்புக்கு (LLM) இனிமேல் அகில இந்திய நுழைவுத் தேர்வு நடத்தப்படும். முதுநிலை சட்டப் படிப்பு எல்.எல்.எம். என்பது இரண்டு ஆண்டு படிப்பாக்கி, ஓராண்டு படிப்பு ரத்து செய்யப்படும்” என்ற அறிவிப்பை இந்திய பார் கவுன்சில் அறிவித்து இருக்கிறது.

ஒடுக்கப்பட்ட, பின்தங்கிய மற்றும் பழங்குடி இனத்தைச் சேர்ந்த மாணவர்கள் சட்டம் பயின்று, முதுநிலை சட்ட மேற்படிப்பு பயில்வதை முற்றிலுமாகத் தடை செய்திடும் வகையில் உள்நோக்கத்தோடு இந்திய பார் கவுன்சில் அறிவிப்புகளைச் செய்திருப்பது அதிர்ச்சி அளிக்கிறது.

சமூக நீதிக் கோட்பாட்டின் ஆணி வேரையே அறுத்தெறியத் துடிக்கும் மத்திய பாஜக அரசின் இத்தகைய செயல் கடும் கண்டனத்துக்கு உரியதாகும்.

கல்வித் துறையில் மாநில அரசுகளின் உரிமைகளைப் பறித்து, கூட்டாட்சித் தத்துவத்திற்கு எதிராக ஏகபோக ஆதிக்கம் செலுத்தி வரும் மத்திய பாஜக அரசு, முதுநிலை சட்டப் படிப்பிற்கு நுழைவுத் தேர்வு நடத்த முயல்வது ஏற்கத்தக்கது அல்ல. எனவே இந்திய பார் கவுன்சில் தனது அறிவிப்பை உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும் என்று வலியுறுத்துகின்றேன்''.

இவ்வாறு வைகோ தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x