

ஆன்லைனில் மருந்துகள் விற்பனை செய்வதை எதிர்த்து வரும் 14-ம் தேதி மருந்து வணிகர்கள் நாடு முழுவதும் ஒருநாள் கடைகளை மூடிவிட்டு வேலைநிறுத்தத்தில் ஈடுபடவுள்ளனர்.
இது தொடர்பாக சென்னை மருந்து வணிகர்கள் சங்க தலைவர் டபிள்யு.எஸ்.மோகன்குமார், பொதுச்செயலாளர் டி.நடராஜன் ஆகியோர் நிருபர்களிடம் இன்று கூறியதாவது:
ஆன்லைன் மூலம் மருந்துகளை விற்பனை செய்யும் திட்டத்தை முறைப்படுத்த மத்திய அரசு முயன்று வருகிறது. இது மருந்துகள், அழகியல் பொருட்கள் சட்டத்துக்கு எதிரானதாகும். இதற்கு நாங்கள் எதிர்ப்பு தெரிவித்து பலமுறை பேச்சுவார்த்தையும் நடத்தியுள்ளோம். ஆனால், எங்கள் கோரிக்கைகளை மத்திய அரசு ஏற்கவில்லை. ஆன்லைன் விற்பனை செயல்பாட்டுக்கு வந்தால் தரம் குறைந்த மருந்துகள் விற்பனை அதிகரிக்கும். போலி மருந்துகள் அதிகரிக்கும். இதுதவிர, தடை செய்யப்பட்ட போதை மருந்துகளும் அதிகரிக்கும் அபாயம் உள்ளது.
மருந்து கிடங்குகள் மற்றும் கடைகளில் 6 மாதங்களுக்கு ஒருமுறை ஆய்வு நடத்தப்படுகிறது. ஆனால், ஆன்லைனில் பெறப்படும் மருந்துகள் எந்த அளவுக்கு பாதுகாப்பானது என்று அறிய முடியாது. எனவே, பொதுமக்களின் நலனை காக்கவும், மருந்து விற்பனையாளர்களின் எதிர்காலத்தை கருத்தில்கொண்டும் ஆன்லைன் மருந்து விற்பனை திட்டத்தை கைவிட வேண்டும்.
இந்த திட்டத்தை எதிர்த்து வரும் 14-ம் தேதி நாடு முழுவதும் வேலைநிறுத்தத்தில் ஈடுபட உள்ளோம். இதில், மருந்து விற்பனையில் ஈடுபட்டுள்ள 8 லட்சத்து 50 ஆயிரம் பிரதிநிதிகள் பங்கேற்கின்றனர். தமிழகத்தில் மட்டும் 40 ஆயிரம் பேர் பங்கேற்கின்றனர். வேலைநிறுத்தம் காரணமாக மருந்து கடைகள் 13-ம் தேதி நள்ளிரவு முதல் 14-ம் தேதி நள்ளிரவு வரை மூடப்பட்டிருக்கும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.