Last Updated : 09 Jan, 2021 07:55 PM

 

Published : 09 Jan 2021 07:55 PM
Last Updated : 09 Jan 2021 07:55 PM

5 ஆண்டுகளுக்கு மேல் ஒரே கட்சி ஆட்சியில் தொடர்ந்தால் அதிகாரிகள் கரை வேட்டி கட்டாத கட்சிக்காரர்களாக மாறிவிடுவர்: ப.சிதம்பரம் பேச்சு

ஐந்து ஆண்டுகளுக்கு மேல் ஒரே கட்சி ஆட்சியில் தொடர்ந்தால் அரசு அதிகாரிகள் கரை வேட்டி கட்டாத கட்சிக்காரர்களாக மாறிவிடுவர் என மத்திய முன்னாள் அமைச்சர் ப.சிதம்பரம் தெரிவித்தார்.

அவர் சிவகங்கை மாவட்டம் கண்ணங்குடியில் காங்கிரஸ் நிர்வாகிகள் கூட்டத்தில் பேசியதாவது:

’’ஐந்து ஆண்டுகளுக்கு ஒருமுறை ஆட்சி மாற்றம் வேண்டும். கேரள மக்கள் புத்திசாலிகள். 5 ஆண்டுகளுக்கு மேல் அவர்கள் எந்தக் கட்சியையும் ஆட்சி செய்ய விடுவதில்லை. ஐந்து ஆண்டுகளுக்கு மேல் ஒரே கட்சி ஆட்சியில் தொடர்ந்தால், அரசு அதிகாரிகள் கரை வேட்டி கட்டாத கட்சிக்காரர்களாக மாறிவிடுவர்.

கடும் குளிரில் 40 நாட்களுக்கு மேலாகப் போராடும் விவசாயிகளின் குரலுக்கு மத்திய அரசு செவிசாய்க்க மறுக்கிறது. மத்திய, மாநில அரசுகள் தாங்கள் சொல்வதுதான் சட்டம் என்பது போல் ஆட்சி செய்கின்றனர். பிரதமர் கிஸான் திட்டத்தில் பல பேர் மீது காவல்துறை வழக்குப் பதிவு செய்தது மூலம் ஊழல் நடந்துள்ளதை அறியலாம்.

இனி காங்கிரஸை நம்பியே நாட்டின் எதிர்காலம் உள்ளது. எடப்பாடி பழனிசாமி அரசு செலவிலும், பன்னீர்செல்வம் கட்சி செலவிலும் விளம்பரம் செய்கின்றனர். இது எங்கே போய் நிற்கும் என்பது 3 மாதங்களுக்குப் பிறகு தெரியும்.

ஏழைகளின் வாழ்வாதாரத்தை யார் பறிக்கிறார்களோ, அவர்கள் ஆட்சி செய்யத் தகுதியற்றவர்கள். அவர்கள் ஆட்சியில் இருக்கக்கூடாது. தட்டுத்தடுமாறி 5 ஆண்டுகளை அதிமுக கடத்திவிட்டது’’.

இவ்வாறு மத்திய முன்னாள் அமைச்சர் ப.சிதம்பரம் தெரிவித்தார்.

இந்தக் கூட்டத்தில் எம்எல்ஏ கே.ஆர்.ராமசாமி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x