Last Updated : 09 Jan, 2021 05:43 PM

 

Published : 09 Jan 2021 05:43 PM
Last Updated : 09 Jan 2021 05:43 PM

ஜல்லிக்கட்டு தொடர்ந்து நடைபெற தேர்தலில் பாஜக வெற்றிபெற வேண்டும்: மதுரை பொங்கல் விழாவில் குஷ்பு பேச்சு

ஜல்லிக்கட்டு தொடர்ந்து நடைபெற பேரவைத் தேர்தலில் பாஜக கண்டிப்பாக வெற்றிப்பெற வேண்டும் என மதுரையில் பாஜக செய்தி தொடர்பாளர் குஷ்பு பேசினார்.

மதுரை தெப்பக்குளம் நடன கோபால நாயகி மந்திர் வளாகத்தில் மதுரை மாநகர் பாஜக சார்பில் நம்ம ஊர் பொங்கல் விழா இன்று நடைபெற்றது. பாஜக பொதுச் செயலர் ஆர்.ஸ்ரீநிவாசன் தலைமை வகித்தார். மாநகர் மாவட்ட தலைவர் கே.கே.சீனிவாசன் வரவேற்றார்.

விழாவில் பாஜக செய்தி தொடர்பாளர் குஷ்பு பேசியதாவது:

பிரதமர் மோடி மீது தமிழக மக்கள் அதிக நம்பிக்கை வைத்துள்ளனர். மோடியின் அனைத்து திட்டங்களும் தமிழக மக்களை சென்றடைந்துள்ளது. இதனால் பேரவைத் தேர்தலில் பாஜகவுக்கு மிகப்பெரிய வெற்றி காத்திருக்கிறது.

பாஜக வளர்ந்து வருகிறது. திமுக, காங்கிரஸ் பயத்துடன் உள்ளன. இதனால் பெண்களைத் தவறாக பேசி வருகின்றனர். இரு கட்சிகளிலும் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை. திமுக, காங்கிரஸ் தலைவர்கள் சுத்தமானவர்கள் இல்லை. அந்த கட்சிகளில் இருந்ததால் அவர்களை பற்றி எனக்கு தெரியும். அவர்களின் வரலாறு என்னிடம் உள்ளது. ஆனால் வெளியே சொல்லமாட்டேன். பாஜகவில் தான் பெண்களுக்கு பாதுகாப்பு உள்ளது.

கரோனா காலத்திலும் மக்களுக்கு உதவிய தலைவர்களில் முதலிடத்தில் பிரதமர் மோடி உள்ளார். ஊழல் குறித்து நேரடி விவாதம் நடத்த தயாரா என முதல்வர் விடுத்த சவாலை மு.க.ஸ்டாலின் ஏற்கவில்லை. நேரடி விவாதத்துக்கு மு.க.ஸ்டாலின் நிபந்தனை விதிக்கிறார்.

இது அவருக்கு அழகா? மக்களுக்கு நல்லது செய்ய வேண்டும் என்ற நினைப்பு திமுகவுக்கு இல்லை. குடும்ப அரசியலை மட்டுமே திமுக செய்கிறது.

தமிழக காங்கிரஸில் 200 பேர் மட்டுமே உள்ளனர். அனைவருக்கும் பதவி கொடுத்துள்ளனர். இருக்கிற அனைவருக்கும் பதவி கொடுத்தால் வேலை செய்வது யார்? இதனால் பாஜக கஷ்டப்பட வேண்டியதில்லை. பிரதமரின் திட்டங்களை மக்களிடம் தெரிவித்தால் போதும் வெற்றிப்பெறலாம். மக்கள் எவ்வித பாதிப்பும் இல்லாமல், சந்தோஷமாக இருக்கிறார்கள் என்றால் அதற்கு கடந்த 6 ஆண்டுகளில் பிரதமர் கொண்வந்த திட்டங்கள் தான் காரணம்.

ஜல்லிக்கட்டு வேண்டாம் என்றார். ஜல்லிக்கட்டு என்றால் சும்மாவா. ஒரு நாள் மட்டும் நடத்திவிட்டு விட்டுவிடும் விழாவா? ஜல்லிக்கட்டு நமது பாரம்பரிய விளையாட்டு. ஜல்லிக்கட்டு காளைகளை மக்கள் குழந்தைகளை போல் வளர்க்கின்றனர். ஜல்லிக்கட்டு ஆண்டுதோறும் ஜல்லிக்கட்டு தொடர்ந்து நடைபெற வேண்டும் என்றால் கண்டிப்பாக தேர்தலில் பாஜக வெற்றிப்பெற வேண்டும்.
வேளாண் சட்டங்கள் விவசாயிகளுக்கு நன்மை தரும். இதனால் யார் சொல்வதையும் கேட்காதீர்கள். பிரதமர் மோடி சொல்வதை மட்டும் கேளுங்கள். மோடி நல்லதை மட்டுமே செய்வார். தமிழ் மொழி மீது பிரதமர் மோடி அக்கறையுடன் உள்ளார். இதனால் தேர்தலில் பாஜகவுக்கு வாக்களிக்க வேண்டும்.

இவ்வாறு குஷ்பு பேசினார்.

பாஜக மாவட்ட பார்வையாளர் கதலி நரசிங்கபெருமாள், துணைத் தலைவர்கள் ஹரிகரன், கராத்தேராஜா மற்றும் நிர்வாகிகள் பங்கேற்றனர். முன்னதாக விழா நடைபெற்ற வளாகத்தில் பாஜக மகளிரணியினர் பொங்கல் வைத்தனர். ஜல்லிக்கட்டு காளை, வண்டி மாடு, சண்டை கிடா, சண்டை கோழி, அம்மி, உரல், ஆட்டுக்கல் ஆகியன வைக்கப்பட்டிருந்தன.

கிராமிய கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது. இதில் அம்மன் பாட்டு பாடும் போது விழாவுக்கு வந்திருந்த பெண்கள் பலர் சாமி வந்து ஆடினர். வேப்பிலை, விபூதி கொடுத்து அவர்களை கட்சியினர் சாந்தப்படுத்தினர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x