Published : 09 Jan 2021 03:59 PM
Last Updated : 09 Jan 2021 03:59 PM

வெள்ளகோவில் அருகே லாரி மீது கார் மோதி விபத்து; 3 பேர் உயிரிழப்பு - 3 பேர் படுகாயம்

வெள்ளகோவில் அருகே இன்று அதிகாலை லாரி மீது கார் மோதிய விபத்தில் மூவர் உயிரிழந்தனர். மூவர் காயம் அடைந்தனர்.

கோவை மாவட்டம் வெள்ளலூர் அண்ணா நகரைச் சேர்ந்தவர் மயில்சாமி (39). தனது குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் 6 பேருடன் ஒரு காரில், வீட்டில் இருந்து கும்பகோணம் கோயிலுக்குச் சென்று கொண்டிருந்தனர். அப்போது இன்று (ஜன. 09) அதிகாலை 4.30 மணிக்கு, வெள்ளகோவில் அருகே தேசிய நெடுஞ்சாலையில் ஓலப்பாளையம் அருகே சாலையோரம் பழுதாகி நின்று கொண்டிருந்த லாரியின் பின்புறம் கார் மோதியது.

இதில், காரி ஒரு பகுதி முழுவதுமாக லாரிக்குள் சென்றது. இதில் காரை ஓட்டி வந்த மயில்சாமி, இவருடைய மனைவி இந்து (37), உறவினர் கவுசல்யா (60) ஆகிய மூவர் சம்பவ இடத்திலேய உயிரிழந்தனர். இவர்களது சடலம் காங்கேயம் அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது.

மயில்சாமி மகன் கவுதம் (12), மகள் ரம்யா (10), மயில்சாமியின் தங்கை கலைவாணி (35) ஆகியோர் காயத்துடன் உயிர் தப்பினர். இவர்கள் திருப்பூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர். இது தொடர்பாக வெள்ளகோவில் போலீஸார் வழக்குப் பதிந்தனர்.

இது தொடர்பாக போலீஸார் கூறுகையில், "கோவை நரசிம்மநாயக்கன்பாளையத்தில் இருந்து திருச்சி நோக்கி அட்டைப்பெட்டியை ஏற்றிக்கொண்டு லாரி வந்துள்ளது. அப்போது, லாரியின் சக்கரம் திடீரென பழுதடைந்தது. இதையடுத்து, லாரியை தேசிய நெடுஞ்சாலையில் நிறுத்திவிட்டு சரிசெய்யும் பணியில் ஈடுபட்டிருந்தனர். லேசான மழை மற்றும் பனி இருந்ததாக தெரிகிறது. இந்நிலையில், அவ்வழியாக வந்த கார், லாரி மீது மோதியதில் மூவர் உயிரிழந்தனர். இது தொடர்பாக லாரி ஓட்டுநர் பாபு (46) என்பவர் மீது வழக்குப் பதிந்து கைது செய்தனர்" என தெரிவித்தனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x