Published : 09 Jan 2021 03:10 AM
Last Updated : 09 Jan 2021 03:10 AM

டெல்டா உட்பட 6 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு

சென்னை

வங்கக்கடல் பகுதியில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம் உள்ளிட்ட 6 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது.

இதுதொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் நா.புவியரசன் செய்தியாளர்களிடம் நேற்று கூறியதாவது:

இலங்கையை ஒட்டி வங்கக்கடல் பகுதியில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக 9-ம் தேதி (இன்று) தஞ்சாவூர், திருவாரூர், நாகை, கடலூர், மயிலாடுதுறை, காரைக்கால் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடியுடன் கனமழையும், மற்ற மாவட்டங்களில் பெரும்பாலான இடங்களில் மிதமான மழையும் பெய்யக்கூடும்.

10-ம் தேதி (நாளை) ராமநாதபுரம், சிவகங்கை, மதுரை, புதுக்கோட்டை, திருச்சி, கரூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடியுடன் கன முதல் மிக கனமழை பெய்யும். தஞ்சாவூர், திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, கடலூர், அரியலூர், பெரம்பலூர், விழுப்புரம், நெல்லை, புதுச்சேரி மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது. இதர மாவட்டங்களில் பெரும்பாலான இடங்களில் மிதமான மழை பெய்யக் கூடும்.

11-ம் தேதி ராமநாதபுரம், தூத்துக்குடி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், சிவகங்கை, மதுரை, புதுக்கோட்டை, திருச்சி, கரூர், தஞ்சாவூர், திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, கடலூர், அரியலூர், பெரம்பலூர், விழுப்புரம், நெல்லை, புதுச்சேரி மாவட்டங்களில் கனமழையும் பெய்யக்கூடும். மற்ற மாவட்டங்களில் மிதமான மழை பெய்யக் கூடும்.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக் கூடும்.

இவ்வாறு அவர் கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x