Published : 09 Jan 2021 03:11 AM
Last Updated : 09 Jan 2021 03:11 AM
சென்னை உயர் நீதிமன்றத்தில் மீனவர்கள் பாதுகாப்பு சங்கம் சார்பில் பீட்டர் ராயன் என்பவர் மீன்பிடி தடை காலத்தில் மீனவர்களுக்கு நாள்தோறும் ரூ.500 வீதம் நிவாரண உதவி வழங்க மத்திய, மாநில அரசுகளுக்கு உத்தரவிட கோரியிருந்தார். இந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், மெரினா கடற்கரையை அழகுபடுத்தவும், மீன் கடைகளை ஒழுங்குபடுத்தவும் பல்வேறு உத்தரவுகளை பிறப்பித்திருந்தது.
இந்நிலையில் இந்த வழக்கு நேற்று தலைமை நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜி, நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் தரப்பில் வழக்கறிஞர் மவுரியா ஆஜராகி, “மீன்பிடித் தடைக்கால மானியத் தொகையை உயர்த்தக் கோரியும், முராரி கமிட்டி பரிந்துரையை அமல்படுத்தக் கோரியும் இந்த வழக்குகடந்த 2015-ம் ஆண்டு தொடரப்பட்டது. ஆனால் வழக்கின் பிரதானகோரிக்கையை விடுத்து மெரினாகடற்கரையை அழகுபடுத்துவதற்கும், லூப் சாலை சீரமைப்பு போன்றவற்றுக்கும் முக்கியத்துவம் கொடுக்கப்பட்டதால் பிரதான கோரிக்கை அப்படியே நிலுவையில் உள்ளது” என வாதிட்டார்.
அதையடுத்து நீதிபதிகள், மெரினா கடற்கரையை அழகுபடுத்துவதை விட மீனவர்களின் நலன் மற்றும் அவர்களுக்கான மனித உரிமைகளே முக்கியத்துவம் வாய்ந்தது. மேலும் மெரினாவில் ஒதுக்கப்படவுள்ள 900 தள்ளுவண்டிகளில் மாற்றுத்திறனாளிகளுக்கும் கடைகளை ஒதுக்கக் கோரி மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. சமூகத்தின் விளிம்பு நிலையில் உள்ளவர்களுக்கும் முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என கருத்து தெரிவித்த நீதிபதிகள், இந்த வழக்கு விசாரணையை பொங்கல் விடுமுறைக்குப் பிறகு தள்ளி வைத்துள்ளனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT