Published : 08 Jan 2021 05:27 PM
Last Updated : 08 Jan 2021 05:27 PM

தமிழ்நாட்டில் 11 புதிய மருத்துவக் கல்லூரிகளில் நடப்பு ஆண்டிலேயே சேர்க்கையைத் தொடங்கிடுக: மார்க்சிஸ்ட் வலியுறுத்தல்

கே.பாலகிருஷ்ணன்: கோப்புப்படம்

சென்னை

தமிழ்நாட்டில் 11 புதிய மருத்துவக் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கையை நடப்பு ஆண்டிலேயே தொடங்கிட வேண்டும் என, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக, கே.பாலகிருஷ்ணன் இன்று (ஜன.08) வெளியிட்ட அறிக்கை:

"தமிழ்நாட்டில் விருதுநகர், ராமநாதபுரம், திண்டுக்கல், நாமக்கல், நீலகிரி, திருப்பூர், கிருஷ்ணகிரி, திருவள்ளூர், நாகப்பட்டினம், அரியலூர், கள்ளக்குறிச்சி ஆகிய மாவட்டங்களில் 11 மருத்துவக் கல்லூரிகளைத் தொடங்குவதற்கு மத்திய அரசு அனுமதி அளித்ததையொட்டி தமிழக அரசு ரூ.1,200 கோடி நிதி ஒதுக்கி கட்டுமானப் பணிகளை மேற்கொண்டு வருகிறது.

தமிழக முதல்வர் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் திருவள்ளூர் மாவட்டத்தில் அரசு விழாவில் கலந்துகொண்டு பேசும்போது, இந்த 11 மருத்துவக் கல்லூரிகளில் தலா 150 மருத்துவ இடங்கள் வீதம் மொத்தம் 1,650 மருத்துவ இடங்கள் புதிதாகக் கிடைத்துள்ளது எனவும், இக்கல்லூரிகளில் நடப்பாண்டிலேயே (2020-2021) மாணவர் சேர்க்கை தொடங்கும் எனவும் அறிவித்தார்.

தமிழகப் பெற்றோர்களும், மாணவர்களும் நடப்பாண்டில் தங்களுக்கு மருத்துவ இடம் கிடைக்கும் எனப் பெரும் எதிர்பார்ப்பில் இருந்தனர். இந்த எதிர்பார்ப்போடு அதிகமானவர்கள் நீட் தேர்வும் எழுதி தேர்ச்சி பெற்றுள்ளார்கள்.

ஏற்கெனவே உள்ள மருத்துவ இடங்களுக்கு மட்டும் மருத்துவக் கலந்தாய்வு இதுவரையில் நடைபெற்றுள்ளது. இதன் மூலம் புதிய மருத்துவக் கல்லூரிகளில் இனி மாணவர் சேர்க்கைக்கு வாய்ப்பில்லை எனத் தெளிவாகிவிட்டது.

இக்கல்லூரிகளில் மாணவர் சேர்க்கைக்கான அனுமதியை மத்திய அரசு இதுவரை வழங்கவில்லை. இதனால் 2021-2022, 2022-2023 ஆண்டுகளில்தான் மாணவர் சேர்க்கை தொடங்கும் எனத் தகவல்கள் வெளியாகி, மாணவர்களுக்கு மிகுந்த அதிர்ச்சியளித்துள்ளது.

அனுமதிக்கப்பட்டுள்ள 11 மருத்துவக் கல்லூரிகளில் 6-க்கும் மேற்பட்ட கல்லூரிகளில் கட்டுமானப் பணிகள் 80 சதவிகிதம் நிறைவு பெற்றுள்ளன. இதர கல்லூரிகளிலும் கட்டுமானப் பணிகள் நடைபெற்று வருகின்றன. நடப்பாண்டில் இக்கல்லூரிகளில் மாணவர்கள் சேர்க்கப்பட்டால் அவர்களுக்கு வகுப்புகள் நடத்தப் போதுமான இட வசதி உள்ளன.

மேலும், சம்பந்தப்பட்ட மாவட்டங்களில் மாவட்ட தலைமை அரசு மருத்துவமனை உள்ளதால் முதலாமாண்டுக்குத் தேவையான பயிற்சிகளையும் அங்கேயே மேற்கொள்ள வாய்ப்புகள் உள்ளன. இவ்வளவு இருந்த பின்னரும் மத்திய அரசு நடப்பாண்டில் மாணவர் சேர்க்கைக்கு அனுமதி அளிக்காதது வன்மையான கண்டனத்திற்குரியதாகும்.

இதர மாநிலங்களில்

இதே சமயத்தில் இந்தியாவில் இதர மாநிலங்களில் கட்டுமானப் பணிகள் தொடங்கப்படாத இடங்களுக்குக் கூட மருத்துவ மாணவர் சேர்க்கைக்கு மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது. உதாரணமாக, ஜம்மு காஷ்மீர் எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுமானப் பணிகள் 2023-ல் முடிவடைகிறது. ஆனால், இந்த ஆண்டில் 50 இடங்கள் ஒதுக்கப்பட்டு வகுப்புகள் தொடங்கவுள்ளன.

இமாச்சலப் பிரதேசம், எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுமானப் பணிகள் 2021 டிசம்பர் மாதம் முடிவடைய உள்ளது. ஆனால், இந்த ஆண்டில் 100 இடங்கள் ஒதுக்கப்பட்டு வகுப்புகள் நடைபெறவுள்ளன.

தெலங்கானா மாநிலம், மகபூப் நகரில் உள்ள அரசு மருத்துவமனைக் கட்டிடம் 2019-ல் நிரந்தரக் கட்டிடத்திற்கு மாற்றப்பட்டது. ஆனால், 2016-லேயே 150 இடங்கள் ஒதுக்கப்பட்டு தற்காலிகக் கட்டிடத்தில் வகுப்புகள் நடந்துள்ளன.

அதேபோல, மங்களகிரி எய்ம்ஸ் மருத்துவமனைக் கட்டிடம் 2020-ல்தான் கட்டி முடிக்கப்பட்டது. ஆனால், 2018-லேயே மாணவர் சேர்க்கை நடந்துள்ளது.

அதேபோல, டெல்லி அம்பேத்கர் மருத்துவக் கல்லூரியில் 100 இடங்களுக்கான வகுப்புகள் தனியார் கட்டிடத்தில் நடைபெற்றது.

ராஜ்காட்டில் எய்ம்ஸ் மருத்துவமனைக்கு 31.12.2020 அன்றுதான் அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது. ஆனால், இம்மருத்துவமனைக்கு 50 எம்பிபிஎஸ் இடங்களுக்கான சேர்க்கை நடைபெற்றுள்ளது.

புதுச்சேரியில் உள்ள ஜிப்மர் மருத்துவமனையின் கிளை காரைக்காலில் தொடங்கப்பட்டு கடந்த 5 ஆண்டுகளாக மாணவர் சேர்ககை நடைபெற்று வருகிறது. ஆனால், அம்மருத்துவக் கல்லூரிக்கான கட்டுமானப்பணிகள் முறைப்படி இப்போதுதான் தொடங்க உள்ளன.

இதுபோன்று இன்னும் பல்வேறு மருத்துவக் கல்லூரிகள் தற்காலிகக் கட்டிடத்தில் வகுப்புகள் நடைபெற்றுள்ளன. ஆனால், தமிழகத்தில் 11 மருத்துவக் கல்லூரிகளில் 80 சதவிகிதம் கட்டுமானப் பணிகள் முடிந்தும் ஒரு இடம் கூட மத்திய பாஜக அரசு ஒதுக்கவில்லை.

தமிழகத்தை வஞ்சிக்கும் நோக்கத்தோடு மத்திய அரசு பாரபட்சமான முறையில் மருத்துவ மாணவர் சேர்க்கைக்கு அனுமதி மறுத்துள்ளது. புதிய கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை நடைபெறாததால் தனியார் மற்றும் நிகர்நிலைப் பல்கலைக்கழகங்களில் அதிகக் கட்டணம் செலுத்தி படிக்க வேண்டிய கட்டாயத்திற்கு மாணவர்கள் தள்ளப்பட்டுள்ளனர்.

மத்திய அரசை வற்புறுத்திட அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்டுக

11 புதிய மருத்துவக் கல்லூரிகளைப் பெற்றுள்ளதை சாதனையாகக் கூறும் தமிழக முதல்வர் நடப்பாண்டில் மாணவர் சேர்க்கை தொடங்கும் என அவர் அளித்த வாக்குறுதியை நிறைவேற்ற வழியில்லாதபோது, மத்திய அரசை நிர்பந்தப்படுத்தி மாணவர் சேர்க்கை நடைபெற அழுத்தம் கொடுக்காமல் பார்வையாளராக இருப்பது தமிழக மக்கள் மத்தியில் பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

எனவே, இதர மாநிலங்களில் நடப்பாண்டிலேயே புதிய மருத்துவக் கல்லூரிகளுக்கும், எய்ம்ஸ் மருத்துவக் கல்லூரிக்கும் மாணவர் சேர்க்கைக்கு மத்திய அரசு அனுமதித்துள்ளதுபோல, தமிழகத்திலும் புதிய மருத்துவக் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை நடப்பாண்டிலேயே தொடங்கிட, தமிழகத்தின் உரிமையைக் காப்பாற்றிட தமிழக அரசு நடவடிக்கை எடுத்திட வேண்டும்.

மேலும், தமிழக மாணவர்களின் மருத்துவப் படிப்புக் கனவை நிறைவேற்றுவதற்கு மத்திய அரசை வற்புறுத்தும் வகையில் அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்ட வேண்டுமெனவும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயற்குழு தமிழக அரசை வற்புறுத்திக் கேட்டுக் கொள்கிறது".

இவ்வாறு கே.பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x