Last Updated : 08 Jan, 2021 02:06 PM

 

Published : 08 Jan 2021 02:06 PM
Last Updated : 08 Jan 2021 02:06 PM

தமிழகத் திரையரங்குகளில் 100% இருக்கை அனுமதியை எதிர்த்து வழக்கு: ஜன.11-ம் தேதிக்குள் அரசு பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவு

நூறு சதவீத இருக்கைகளுடன் திரையரங்குகள் செயல்பட அனுமதி வழங்கி, தமிழக அரசு பிறப்பித்த அரசாணையை ரத்து செய்ய வேண்டும் என்று உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இதை விசாரித்த நீதிமன்றம், வரும் 11-ம் தேதிக்குள் மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க உத்தரவிட்டுள்ளது.

மதுரை அண்ணாநகரைச் வழக்கறிஞர் முத்துக்குமார், பழைய குயவர்பாளையத்தை போனிபாஸ், திருச்செந்தூர் ராம்குமார் ஆகியோர் உயர் நீதிமன்றக் கிளையில் தாக்கல் செய்த மனுக்கள்:

''இந்தியா முழுவதும் கரோனா வைரஸ் தொற்று காரணமாகக் கடந்த ஆண்டு மார்ச் 15 முதல் திரையரங்குகள் மூடப்பட்டன. தற்போது திரையரங்குகள் 50 சதவீத இருக்கையுடன் செயல்படுகின்றன. இதனிடையே நூறு சதவீத இருக்கைகளுடன் திரையங்குகள் செயல்படத் தமிழக அரசு அனுமதி வழங்கியுள்ளது.

உருமாறிய கரோனா பரவி வரும் சூழலில் நூறு சதவீத இருக்கைகளுடன் திரையரங்குகள் செயல்பட்டால் கரோனா பாதிப்பு மேலும் அதிகரிக்கும். எனவே, நூறு சதவீத இருக்கைகளுடன் திரையரங்குகள் செயல்பட அனுமதி வழங்கி, தமிழக அரசு பிறப்பித்த அரசாணையை ரத்து செய்ய வேண்டும்''.

இவ்வாறு மனுக்களில் கூறப்பட்டிருந்தது.

இந்த மனுக்கள் நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ், எஸ்.ஆனந்தி அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தன.

மனுதாரர்கள் சார்பில் வழக்கறிஞர்கள் ஏ.கண்ணன், எஸ்.பாஸ்கர்மதுரம், ராம்சுந்தர் ஆகியோர் வாதிடுகையில், ''மத்தியப் பேரிடர் மேலாண்மைத் துறை விதிமுறைகளுக்கு எதிராக மாநில அரசு, திரையரங்குகள் நூறு சதவீத இருக்கையுடன் இயங்குவதற்கு அனுமதி வழங்கியுள்ளது. காட்சிகளின் எண்ணிக்கையும் அதிகரிக்கப்பட்டுள்ளது. இது கரோனா ஆபத்தை மேலும் அதிகரிக்கும்'' என்றனர்.

மத்திய அரசு தரப்பில் உதவி சொலிசிட்டர் ஜெனரல் விக்டோரியா கவுரி வாதிடுகையில், ''திரையரங்குகள் 50 சதவீத இருக்கைகளுடன் செயல்படுவதற்கே மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது. திரையரங்கம், வணிக வளாகம் மற்றும் பொழுபோக்கு விடுதிகளில் இருக்கைகள் எவ்வாறு சமூக இடைவெளியுடன் இருக்க வேண்டும் என்பதும் கூறப்பட்டுள்ளது. மத்திய அரசின் விதிமுறைகளைக் கடுமையாகப் பின்பற்ற வேண்டும் என மாநில அரசுகளை உள்துறை அமைச்சகம் கேட்டுக் கொண்டுள்ளது'' என்று தெரிவித்தார்.

தமிழக அரசு சார்பில் கூடுதல் அட்வகேட் ஜெனரல் ஸ்ரீசரன் ரங்கராஜன் வாதிடுகையில், ''தியேட்டர் உரிமையாளர்கள், திரைப்படத் தயாரிப்பாளர்கள், திரையுலகினரின் கோரிக்கையை ஏற்று அனுமதி வழங்கப்பட்டுள்ளது. கரோனா தடுப்பு விதிமுறைகளைப் பின்பற்ற உத்தரவிடப்பட்டுள்ளது'' என்றார்.

இதையடுத்து நீதிபதிகள், ''ஜன.11 வரை திரையரங்குகள் 50 சதவீத இருக்கைகளுடன் மட்டுமே செயல்பட வேண்டும். 50 சதவீத இருக்கைகளுடன் திரையரங்குகள் செயல்படும் நிலையில், காட்சிகளை அதிகப்படுத்துவது குறித்து மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க வேண்டும்'' என்று உத்தரவிட்டு விசாரணையை ஜன.11-க்கு ஒத்தி வைத்தனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x