

மதுரை மாவட்டத்தில் நாளை முதல் கரோனா தடுப்பூசி ஒத்திகை சிறப்பு முகாம்கள் தொடங்குகிறது.
கரோனா வைரஸ் தொற்று பரவத் தொடங்கி ஓராண்க்கும் மேல் ஆகியுள்ள நிலையில் அந்தத் தொற்று நோயைத் தடுக்க தடுப்பூசிப் பணிகளை நாடு முழுவதும் சுகாதாரத்துறை முடுக்கிவிட்டுள்ளது.
முதற்கட்டமாக 30 கோடி பேருக்க தடுப்பூசி போடுவதற்கு மத்திய அரசு முடிவெடுத்துள்ளது. இதற்காக நாடு முழுவதும் தடுப்பூசி ஒத்திகை கடந்த 2-ம் தேதி வெற்றிகரமாக நடைபெற்றது.
தமிழகத்தில் 5 மாவட்டங்களில் இந்த ஒத்திகை நடந்து முடிந்தநிலையில் மதுரை மாவட்டத்தில் தடுப்பூசி ஒத்திகை சிறப்பு முகாம்கள் நாளை மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனை, மேலூர் அரசு மருத்துவமனை, கோவில்பாப்பாக்குடி அரசு ஆரம்ப சுகாதாரநிலையம், கே.புதூர் நகர்ப்புற ஆரம்ப சுகாதாரநிலையம் மற்றும் ஒரு தனியார் மருத்துவமனை உள்ளிட்ட 5 இடங்களில் நடக்கின்றன.
தடுப்பூசி போடுவதற்கு முன் எந்த ஒரு தவறும் நடக்காமல் இருக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இந்த ஒத்திகை நிகழ்ச்சி நடக்கிறது. இந்த ஒத்திகை நிகழ்ச்சியில் ஒவ்வொரு இடத்திலும் 25 பயனாளிகள் பயன்பெறும் விதமாக நடத்தப்படுகிறது.