தமிழக திரையரங்குகளில் நூறு சதவீத இருக்கைக்கு எதிரான வழக்குகள் நாளை விசாரணை: உயர் நீதிமன்ற நீதிபதிகள் அறிவிப்பு

தமிழக திரையரங்குகளில் நூறு சதவீத இருக்கைக்கு எதிரான வழக்குகள் நாளை விசாரணை: உயர் நீதிமன்ற நீதிபதிகள் அறிவிப்பு
Updated on
1 min read

தமிழகத்தில் திரையரங்குகளில் நூறு சதவீத இருக்கைக்கு அனுமதி வழங்கியதை எதிர்த்து தாக்கலான மனுக்களை அவசர மனுவாக விசாரிக்க வழக்கறிஞர்கள் கோரிக்கை விடுத்ததால் அந்த மனுக்களை நாளை விசாரிப்பதாக நீதிபதிகள் தெரிவித்தனர்.

மதுரை அண்ணாநகர் வழக்கறிஞர் எஸ்.முத்துகுமார், பழைய குயவர்பாளையம் போனிபேஸ் ஆகியோர் உயர் நீதிமன்றக் கிளையில் மனு தாக்கல் செய்த மனுக்களில் கூறியிருப்பதாவது:

இந்தியா முழுவதும் கரோனா வைரஸ் தொற்று காரணமாக கடந்தாண்டு மார்ச் 15 முதல் திரையரங்குகள் மூடப்பட்டன. தமிழகத்தில் மார்ச் 17 முதல் திரையரங்குகள் மூடப்பட்டன. பின்னர் கடுமையான ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. கரோனா பரவல் குறைந்ததையடுத்து ஊரடங்கு தளர்த்தப்பட்டது.

இதையடுத்து திரையரங்குகள் 50 சதவீத இருக்கையுடன் செயல்பட மத்திய அரசு அனுமதி வழங்கியது. அதன்படி தமிழகத்தில் நவ.10 முதல் 50 சதவீத இருக்கைகளுடன் திரையரங்குகள் செயலபட அனுமதி வழங்கப்பட்டது. இந்நிலையில் திரையரங்கு அதிபர்கள், சினிமா தயாரிப்பாளர்கள், நடிகர்களின் கோரிக்கையை ஏற்று நூறு சதவீத இருக்கைகளுடன் திரையங்குகள் செயல்பட அனுமதி வழங்கியுள்ளது.

இதற்கு மத்திய அரசு கண்டனம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக தமிழக தலைமைச் செயலருக்கு மத்திய அரசு கடிதம் அனுப்பியுள்ளது. கரோனா தடுப்பு நடவடிக்கைகளில் மத்திய அரசு மற்றும் உச்ச நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுகளை மாநில அரசுகள் கடுமையான பின்பற்ற வேண்டும்.

நூறு சதவீத இருக்கைகளுடன் திரையரங்குகள் செயல்பட்டால் கரோனா தொற்று அதிகரிக்கும். உருமாறிய கரோனா பரவி வரும் சூழலில் திரையரங்குகளில் நூறு சதவீத இருக்கைகளுக்கு அனுமதி வழங்குவது ஆபத்தை விளைவிக்கும்.

எனவே, நூறு சதவீத இருக்கைகளுடன் திரையரங்குகள் செயல்பட அனுமதி வழங்கி தமிழக அரசு பிறப்பித்த அரசாணையை ரத்து செய்ய வேண்டும்.

இவ்வாறு மனுக்களில் கூறப்பட்டிருந்தது.

இந்நிலையில் மனுதாரர்கள் சார்பில் வழக்கறிஞர்கள் ராம்சுந்தர் , ஏ.கண்ணன், எஸ்.பாஸ்கர் மதுரம் ஆகியோர் நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ், எஸ்.ஆனந்தி அமர்வில் இன்று காணொலி வழியாக ஆஜராகி தங்கள் மனுவை அவசர மனுவாக எடுத்து விசாரிக்க வேண்டும் என கோரிக்கை வைத்தனர்.

இதையடுத்து திரையங்குகளில் நூறு சதவீத இருக்கைக்கு அனுமதி வழங்கியதை எதிர்த்து தாக்கலான மனுக்களை நாளை (ஜன. 8) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளவதாக நீதிபதிகள் தெரிவித்தனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in