Published : 07 Jan 2021 04:54 PM
Last Updated : 07 Jan 2021 04:54 PM

80 வயது முதியோர் தபால் வாக்கு அளிக்க அனுமதிக்கும் உத்தரவை எதிர்த்த வழக்குகள்; தேர்தல் ஆணையம் பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவு

80 வயது முதியோருக்கும், மாற்றுத்திறனாளிகளுக்கும் தபால் வாக்கு அளிக்க அனுமதித்து பிறப்பித்த உத்தரவை எதிர்த்த வழக்குகளுக்கு நான்கு வாரங்களில் பதிலளிக்க தேர்தல் ஆணையத்துக்கும், தமிழக தலைமை தேர்தல் அதிகாரிக்கும் உத்தரவிட்ட சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தேர்தலின் போது நாட்டின் பாதுகாப்புப் படைகளில் உள்ளவர்கள், வெளிமாநில மற்றும் மாவட்டங்களில் பணியாற்றும் காவல்துறை மற்றும் ஆயுதப்படையினர், தேர்தல் பணியில் ஈடுபடுத்தப்படும் அரசு ஊழியர்கள் ஆகியோர் வாக்களிப்பதை உறுதிசெய்யும் விதமாக தபால் ஓட்டுகள் பதிவு செய்யும் நடைமுறை தேர்தல் ஆணையத்தால் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில், எதிர்வர உள்ள சட்டப்பேரவைத் தேர்தலில் 80 வயதுக்கு மேலான மூத்த குடிமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு தபால் வாக்கு பதிவு செய்யும் வசதியை வழங்குவதென தேர்தல் ஆணையம் முடிவெடுத்துள்ளது.

தபால் ஓட்டை பெறுவதற்காக வாக்குச்சாவடி அதிகாரி தான் நேரில் சென்று விண்ணப்பத்தை வாக்காளர்களிடம் வழங்க வேண்டும் என விதி உள்ளதால், முறைகேடுகள் நடக்க வாய்ப்பு அதிகம் இருப்பதாகவும், அரசுக்கு பொருளாதார சுமை அதிகரிக்கும் எனக் கூறி, திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, சார்பில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

இதேபோல, மாற்றுத்திறனாளிகள் சங்கம் மற்றும் துரை என்பவர் சார்பில் வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டன.

அந்த மனுக்களில், 80 வயதுக்கு மேலானவர்களை சரிபார்க்க எந்த நடைமுறையும் இல்லை எனவும், இந்த புதிய நடைமுறை கள்ள ஓட்டுக்கு வழிவகுக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், இதுசம்பந்தமாக தேர்தல் ஆணையம், தமிழக தலைமை தேர்தல் அதிகாரி பிறப்பித்த உத்தரவுகளுக்கு தடை விதிக்க வேண்டும் எனவும், அந்த உத்தரவுகளை ரத்து செய்ய வேண்டும் எனவும் கோரப்பட்டது.

இந்த வழக்கு தலைமை நீதிபதி சஞ்சீவ் பானர்ஜி மற்றும் நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி ஆகியோர் அடங்கிய அமர்வில் இன்று (ஜன. 07) விசாரணைக்கு வந்தது.

அப்போது, தேர்தல் ஆணைய உத்தரவை எதிர்த்து வழக்கு தொடர்ந்த 86 வயது முதியவர் துரை தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் விடுதலை, சட்டப்பேரவைத் தேர்தல் நெருங்க உள்ளதால் தேர்தல் ஆணையத்தின் உத்தரவுக்குத் தடை விதிக்க வேண்டும் என வாதிட்டார்.

மாற்றுத்திறனாளிகள் சங்கம் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் சண்முகசுந்தரம், தேர்தல் அறிவிப்பு வெளியிட்டு விட்டால் நீதிமன்றம் தலையிட முடியாது என வாதிட்டார்.

திமுக தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் வில்சன், இந்த புதிய நடைமுறை காரணமாக ரகசியமாக வாக்களிக்கும் முறை பாதிக்கப்படும் என்றும், இதன் மூலம் 30 சதவீதம் பேர் தபால் வாக்குகளை பதிவு செய்யக் கூடும் என்றும் குறிப்பிட்டார்.

மேலும், தேர்தல் அறிவிப்பு வெளியிட்டு விட்டால் நீதிமன்றம் தலையிட முடியாது என்றும் குறிப்பிட்டார்.

இந்த வாதங்களை கேட்ட நீதிபதிகள், தேர்தல் ஆணையம், தமிழக தலைமை தேர்தல் அதிகாரி தரப்பு கருத்தை கேட்காமல் இடைக்கால உத்தரவு பிறப்பிக்க முடியாது என மறுத்து விட்டனர்.

அதேசமயம், மனுவுக்கு நான்கு வாரங்களில் பதிலளிக்க தேர்தல் ஆணையத்துக்கும், தமிழக தலைமை தேர்தல் அதிகாரிக்கும் உத்தரவிட்டு, விசாரணையை தள்ளி வைத்தனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x