புதுச்சேரி அரசைக் கண்டித்து காரைக்காலில் பாஜகவினர் ஆர்ப்பாட்டம்

காரைக்காலில் புதுச்சேரி அரசைக் கண்டித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பாஜகவினர்.
காரைக்காலில் புதுச்சேரி அரசைக் கண்டித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பாஜகவினர்.
Updated on
1 min read

புதுச்சேரி கல்வித்துறையின் நடவடிக்கையைக் கண்டித்து காரைக்காலில் இன்று (ஜன.7) பாஜகவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

காரைக்கால் மாவட்டம் செருமாவிலங்கை பகுதியில் அமைந்துள்ள, புதுச்சேரி அரசின், பெருந்தலைவர் காமராஜர் பொறியியல் கல்லூரியில், கடந்த 12 ஆண்டுகளாக இருந்து வந்த பி.டெக்., சி.எஸ்.இ., ஐ.டி., இ.சி.இ ஆகிய பாடப்பிரிவுகள் நிகழாண்டு திடீரென நீக்கம் செய்யப்பட்டதற்குக் கண்டனம் தெரிவித்தும், தனியார் கல்லூரிகள் பணம் சம்பாதிக்க புதுச்சேரி அரசும், கல்வித்துறையும் துணைபோவதாகக் குற்றம்சாட்டியும், நிகழாண்டிலேயே மீண்டும் இந்தப் பாடப்பிரிவுகளைச் சேர்க்க வேண்டும் என்று வலியுறுத்தியும் இந்த ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.

காரைக்கால் பழைய ரயிலடி அருகே நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு பாஜக மாவட்டத் தலைவர் ஜெ.துரை சேனாதிபதி தலைமை வகித்தார். மாநிலத் துணைத் தலைவர்கள் எம்.அருள்முருகன், நளினி, ஓ.பி.சி அணி மாநிலத் துணைத் தலைவர் செல்வராஜ் உள்ளிட்ட நிர்வாகிகள் கோரிக்கைகளை வலியுறுத்தியும், புதுச்சேரி அரசின் செயல்பாட்டுக்குக் கண்டனம் தெரிவித்தும் பேசினர். கட்சியினர் திரளானோர் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in