Published : 07 Jan 2021 02:17 PM
Last Updated : 07 Jan 2021 02:17 PM

ஜன.20 வரை மக்கள் கிராம சபைக் கூட்டங்கள்: கால அவகாசத்தை நீட்டித்து திமுக அறிவிப்பு

மக்கள் கிராம/ வார்டு சபைக் கூட்டங்கள் நடத்துவதற்கு கால அவகாசத்தை நீட்டித்து திமுக தலைமைக் கழகம் அறிவிப்பு வெளியிடுள்ளது.

சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு, திமுக சார்பில் கடந்த டிச.23 முதல் மக்கள் கிராம/ வார்டு சபைக் கூட்டங்கள் நடத்தப்பட்டு வருகின்றன. இதில், 'அதிமுகவை நிராகரிக்கிறோம்' என்ற பெயரில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு வருகிறது. பல கிராமங்களில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலினும் இந்தக் கூட்டங்களில் நேரடியாகப் பங்கேற்று வருகிறார்.

இந்தக் கூட்டங்கள் வரும் 10-ம் தேதி வரை நடைபெறும் என, ஏற்கெனவே அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், மக்கள் கிராம/ வார்டு சபைக் கூட்டங்கள் நடத்த வரும் 20ஆம் தேதி வரை கால அவகாசத்தை நீட்டித்து திமுக அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

இது தொடர்பாக, திமுக தலைமைக் கழகம் இன்று (ஜன.07) வெளியிட்டுள்ள அறிவிப்பு:

"2020 டிசம்பர் 23 முதல் 2021 ஜனவரி 10 வரை தமிழகம் முழுவதும் 16 ஆயிரத்து 500 'மக்கள் கிராம/ வார்டு சபைக் கூட்டங்கள்' நடத்திட வேண்டுமென, மாவட்ட, மாநகர திமுக செயலாளர்கள், ஒன்றிய, நகர, பகுதி, பேரூர்க் கழகச் செயலாளர்கள் கலந்துரையாடல் கூட்டத்தில், எடுத்த முடிவின்படி தமிழகம் முழுவதும் மிகவும் எழுச்சியுடன் நடைபெற்று வருகிறது.

மக்கள் கிராம/ வார்டு சபைக் கூட்டங்கள், சில மாவட்டங்களில் பெருமழையின் காரணமாக நடத்த முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளதாகவும், கால அவகாசத்தை நீட்டித்திட வேண்டுமென்றும் மாவட்டச் செயலாளர்கள் வைத்த கோரிக்கையினையேற்று, 2021 ஜனவரி 20ஆம் தேதி வரை 'மக்கள் கிராம/ வார்டு சபைக் கூட்டங்கள்' நடத்திட கால அவகாசம் நீட்டிக்கப்படுகிறது".

இவ்வாறு திமுக தலைமைக் கழகம் தெரிவித்துள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x