Published : 07 Jan 2021 03:15 AM
Last Updated : 07 Jan 2021 03:15 AM

செங்கல்பட்டு மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் மழைநீர் சூழ்ந்து பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு

கூடுவாஞ்சேரி அருள் நகரில் சாலையில் ஆறாக ஓடும் மழைநீர்.

வண்டலூர்

செங்கல்பட்டு மாவட்டத்தில் தொடர்ந்து கடந்த இரண்டு நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக பெரும்பாலான குடியிருப்பு பகுதிகளில் வெள்ளநீர் சூழ்ந்துள்ளது. கூடுவாஞ்சேரி அருள் நகர், ஜெகதீஷ் நகர் பகுதியில் மட்டும் 100-க்கும் மேற்பட்ட வீடுகளைச் சுற்றி மழைநீர் தேங்கியுள்ளது. பல வீடுகளுக்குள் மழைநீர் புகுந்துள்ளது. கடந்த ஒரு மாதத்தில் மட்டும் மூன்றாவது முறையாக பொதுமக்கள் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இயல்பு வாழ்க்கை முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளதால், ஆக்கிரமிப்பில் உள்ள வீடுகளை அகற்ற வேண்டும் என்றும் கால்வாய்களை சரியாக பராமரிக்க வேண்டும் என்றும் பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

ஒருநாள் மழைக்கே குடியிருப்பு பகுதி வீடுகள், தெருக்களில் தண்ணீர் புகுந்தது. நேற்று சிங்கப்பெருமாள் கோவில், மறைமலை நகர், காட்டாங்கொளத்தூர், கூடுவாஞ்சேரி, ஊரப்பாக்கத்திலும் மிதமான மழை பெய்தது. ஏற்கெனவே இரண்டு நாட்களாக மழை பெய்ததால் குடியிருப்பு பகுதிகள் வெள்ளத்தில் மிதக்கின்றன.

ஊரப்பாக்கத்தில் செல்வராஜ் நகர், அம்பேத்கர் நகர், பிரிரா நகர், எம்.ஜி. நகர் என பல இடங்களில் மழைநீர் சூழ்ந்துள்ளது. ஊரப்பாக்கத்தில் 100-க்கும் மேற்பட்ட வீடுகளைச் சுற்றி மழைநீர் தேங்கியுள்ளதாலும் தேங்கியுள்ள மழைநீர் வடிவதற்குள் மீண்டும் மழை பெய்து வருவதால் குடியிருப்புவாசிகள், இருசக்கர வாகனங்கள் மற்றும் நான்கு சக்கர வாகனங்களை பாதுகாப்பான இடங்களுக்கு கொண்டு சென்று நிறுத்தியுள்ளனர். மேலும் மழை நீடிக்கும் என வானிலை ஆய்வு தெரிவித்துள்ளதால் பொதுமக்கள் மத்தியில் அச்சம் ஏற்பட்டுள்ளது.

மழை காரணமாக மறைமலை நகரில் சாலைஓரமாக இருந்த பல புளியமரங்கள் விழுந்தன. இதனால் விபத்து ஏற்படும் அபாயமும் உள்ளது.எந்த ஒரு அசம்பாவிதமும் நடைபெறுவதற்கு முன்பு சாலையில் விழுந்துள்ள மரங்களை அகற்ற வேண்டும் என வாகன ஓட்டிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x