Published : 06 Jan 2021 09:40 PM
Last Updated : 06 Jan 2021 09:40 PM

கன்னியாகுமரி எஸ்.ஐ. கொலை வழக்கில் சென்னை இளைஞர் கைது: கத்தாரிலிருந்து திரும்பும்போது என்ஐஏ கைது செய்தது

கன்னியாகுமரி மாவட்டம் களியக்காவிளை சோதனைச் சாவடியில் கடந்த ஆண்டு கொல்லப்பட்ட எஸ்.ஐ. வில்சன் கொலை வழக்கில் சம்பந்தப்பட்ட சென்னையைச் சேர்ந்த காலித் என்கிற இளைஞர், கத்தாரிலிருந்து சென்னை வந்தபோது என்ஐஏ அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார்.

கன்னியாகுமரி மாவட்டம் களியக்காவிளை சோதனைச் சாவடியில் கடந்த ஆண்டு ஜனவரி 8-ம் தேதி இரவு பணியில் இருந்த சிறப்பு எஸ்.ஐ. வில்சன் (57) துப்பாக்கியால் சுட்டுப் படுகொலை செய்யப்பட்டார்.

இந்த வழக்கு கியூ பிராஞ்ச் போலீஸ் விசாரணைக்கு மாற்றப்பட்டது. கியூ பிராஞ்ச் போலீஸார் நடத்திய விசாரணை, சிசிடிவி காட்சிப் பதிவுகள் மூலம் அவரைக் கொலை செய்தது குமரி மாவட்டம் திருவிதாங்கோட்டை சேர்ந்த அப்துல் சமீம், கேரளா கோட்டாறு பகுதியைச் சேர்ந்த தவுபிக் என்பது தெரியவந்தது.

இருவரும் தலைமறைவான நிலையில், அவர்களை அண்டை மாநிலங்களிலும் போலீஸார் தீவிரமாகத் தேடி வந்தனர். இந்நிலையில் வில்சனைச் சுட்டுக் கொல்வதற்குத் துப்பாக்கி வழங்கியதாக இஜாஸ் பாட்ஷா என்ற ஆம்னி பேருந்து ஓட்டுநரை பெங்களூருவில் கர்நாடக போலீஸார் கைது செய்தனர்.

அவருக்கும் வில்சன் கொலையாளிகளுக்கும் சம்பந்தம் இருக்குமோ என்கிற ரீதியில் போலீஸார் நடத்திய விசாரணையைத் தொடர்ந்து, கடந்த ஆண்டு ஜன.14-ம் தேதி கர்நாடக மாநிலம் உடுப்பி ரயில் நிலையத்தில் பதுங்கி இருந்த அப்துல் சமீம், தவுபிக் ஆகியோரை போலீஸார் கைது செய்தனர்.

இந்த வழக்கை என்.ஐ.ஏவுக்கு மாற்றக் கோரி 2020-ம் ஆண்டு ஜனவரி 22-ல் தமிழக அரசு பரிந்துரைத்தது. பிப்ரவரி 2-ல் வழக்கை என்.ஐ.ஏ கையில் எடுத்தது. விசாரணையில் 7 பேர் வரை மறைமுகத் தொடர்பு இருப்பதாகத் தெரியவந்தது.

இந்த வழக்கு சம்பந்தப்பட்ட அப்துல் ஷமீம், தவுபிக், காஜா மொஹிதீன், மெஹபூப் பாஷா, இஜாஸ் பாஷா மற்றும் ஜாஃபர் அலி ஆகியோரை ஏற்கெனவே கைது செய்த என்.ஐ.ஏ அதிகாரிகள், அவர்கள் மீது ஐபிசி பிரிவு 120 (பி) (கூட்டுச் சதி), 302 (கொலை) 353 (அரசு ஊழியரைப் பணி செய்ய விடாமல் தடுத்தல்) 506 (கொலை மிரட்டல்), 34 குழுவாக ஒன்றிணைந்து குற்றச்செயலில் ஈடுபடுதல் யு.எ.பி சட்டப்பிரிவு 16,18,18 பி,20,23,38 மற்றும் 39 பிரிவின் கீழும், ஆயுதத்தடைச் சட்டம் 25 (1பி), 27 ஆகிவற்றின் கீழும் வழக்குப் பதிவு செய்து சிறையில் அடைத்தனர்.

இந்நிலையில் இந்த வழக்குக்குத் தொடர்புடையதாகக் கருதப்படும் சென்னையைச் சேர்ந்த சிஹாபுதீன் (எ) சிராஜுதீன் (எ) காலித் (39) என்பவர் கத்தாரிலிருந்து சென்னை வந்தபோது, என்.ஐ.ஏ அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார்.

சிஹாபுதீன் என்கிற காலித், குற்றவாளிக்கு ஆயுதம் கொடுத்தவர் என்பதும், இவர் கொலை நடந்தவுடன் வெளிநாட்டுக்குத் தப்பிச் சென்றதும் குறிப்பிடத்தக்கது. ஓராண்டாக வெளிநாட்டில் இருந்தவர் இன்று சென்னை திரும்பும்போது கைது செய்யப்பட்டுள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x