அவனியாபுரம் ஜல்லிக்கட்டுக்கு அனைத்து சமூத்தினர் கொண்ட குழு அமைக்கக்கோரி வழக்கு

அவனியாபுரம் ஜல்லிக்கட்டுக்கு அனைத்து சமூத்தினர் கொண்ட குழு அமைக்கக்கோரி வழக்கு
Updated on
1 min read

அவனியாபுரத்தில் ஜல்லிக்கட்டு நடத்த அனைத்து தரப்பினர் அடங்கிய ஆலோசனைக்குழு அமைக்கக்கோரி உயர் நீதிமன்றக் கிளையில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

அவனியாபுரத்தைச் சேர்ந்தவர் எம்.முனியசாமி. மதுரை மாவட்ட விடுதலை சிறுத்தைகள் கட்சியின் உதவி அமைப்பாளராக உள்ளார். இவர், உயர் நீதிமன்றக் கிளையில் தாக்கல் செய்த மனு:

தமிழகத்தில் முதல் ஜல்லிக்கட்டு மதுரை அவனியாபுரத்தில் பொங்கல் பண்டிகை அன்று நடைபெறும். இந்தாண்டு அவனியாபுரத்தில் ஜன. 14-ல் ஜல்லிக்கட்டு நடைபெறுகிறது.

இவ்விழாவை அவனியாபுரத்தில் வாழும் அனைத்து சமூகத்தினரும் சேர்ந்து நடத்தி வந்தனர். தற்போது ஜல்லிக்கட்டு விழாவை அரசே நடத்தி வருகிறது.

கடந்த சில ஆண்டுகளாக அவனியாபுரம் ஜல்லிக்கட்டு நடத்தும் ஆலோசனைக்குழுவில் ஒரு பிரிவினருக்கும் மட்டும் பிரநிதித்துவம் வழங்கப்பட்டது. குறிப்பாக அவனியாபுரத்தில் அதிகளவில் வாழும் பட்டியல் பிரிவினருக்கு பிரிநிதித்துவம் வழங்கப்படுவதில்லை.

இதை எதிர்த்து கடந்த ஆண்டு ஜனவரியில் உயர் நீதிமன்றக் கிளையில் வழக்கு தொடர்ந்த போது, அனைத்து பிரிவினரும் அடங்கிய ஆலோசனைக்குழு அமைக்க நீதிமன்றம் உத்தரவிட்டது.

இந்தாண்டு ஜல்லிக்கட்டு அறிவிக்கப்பட்டதும் சிலர் தாங்கள் தான் ஜல்லிக்கட்டு நடத்தும் ஆலோசனைக்குழு என அறிவித்து செயல்பட்டு வருகின்றனர்.

ஜல்லிக்கட்டு ஆலோசனைக்குழுவில் அவனியாபுரத்தில் அதிகளவில் வாழும் பட்டியல் பிரிவினரை புறக்கணிப்பது அரசியலமைப்பு சட்ட சட்டவிரோதமாகும். எனவே ஜன. 14-ல் அவனியாபுரத்தில் ஜல்லிக்கட்டு நடத்த அனைத்து சமூகத்தினர் அடங்கிய ஆலோசனைக்குழு அமைக்க உத்தரவிட வேண்டும்.

இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.

இந்த மனு விரைவில் விசாரணைக்கு வரவுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in