Last Updated : 06 Jan, 2021 05:55 PM

 

Published : 06 Jan 2021 05:55 PM
Last Updated : 06 Jan 2021 05:55 PM

ராஜீவ்காந்தி கொலை வழக்கு கைதி ரவிச்சந்திரனுக்கு 2 மாத பரோல் கேட்டு வழக்கு: உள்துறை செயலர் பதிலளிக்க உத்தரவு

மதுரை

ராஜீவ்காந்தி கொலை வழக்கு கைதி ரவச்சந்திரனுக்கு 2 மாத பரோல் விடுமுறை கேட்டு தாக்கலான மனுவுக்கு உள்துறை செயலர் பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

அருப்புக்கோட்டையைச் சேர்ந்தவர் ரவிச்சந்திரன். இவர் முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் கைதாகி மதுரை மத்திய சிறையில் ஆயுள் தண்டனை அனுபவித்து வருகிறார். ரவிச்சந்திரனுக்கு 2 மாதம் பரோல் விடுமுறை கேட்டு அவரது தாயார் ராஜேஸ்வரி உயர் நீதிமன்றக் கிளையில் மனு தாக்கல் செய்துள்ளார்.

அதில் கூறியிருப்பதாவது:

ரவிச்சந்திரன் 28 ஆண்டுகளாக மதுரை மத்திய சிறையில் ஆயுள் தண்டனை அனுபவித்து வருகிறார். ராஜீவ்காந்தி கொலை வழக்கில் சிறையிலுள்ள ரவிச்சந்திரன் உட்பட 7 பேரையும் விடுதலை செய்வது குறித்து தமிழக அரசு முடிவு செய்யலாம் என உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இதையடுத்து 7 பேரையும் விடுதலை செய்ய தமிழக அமைச்சரவை தீர்மானம் நிறைவேற்றி ஆளுனரின் ஒப்புதலுக்கு அனுப்பியது. ஆனால் ஆளுனர் இதுவரை ஒப்புதல் வழங்கவில்லை.

கரோனா தொற்று பரவி வருவதால் ரவிச்சந்திரனுக்கு 3 மாத பரோல் விடுப்பு கோரி சிறை அதிகாரிகளுக்கு மனு அனுப்பினேன். மத்திய சட்டத்தின் கீழ் ரவிச்சந்திரன் தண்டிக்கப்பட்டு உள்ளதால் பரோல் வழங்க முடியாது என மனு நிராகரிக்கப்பட்டது.

இதே காரணத்துக்காக ஏற்கெனவே ஒரு முறை பரோல் மறுக்கப்பட்ட போது, அதை உயர் நீதிமன்றக் கிளை ரத்து செய்துள்ளது. எனவே ரவிச்சந்திரனுக்கு 2 மாத பரோல் விடுமுறை வழங்க உத்தரவிட வேண்டும்.

இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது.

இந்த மனு நீதிபதிகள் கே.கல்யாணசுந்தரம், இளங்கோவன் அமர்வில் விசாரணைக்கு வந்தது. மனு தொடர்பாக தமிழக உள்துறை செயலர், சிறைத்துறை தலைவர், மதுரை மத்திய சிறை கண்காணிப்பாளர் ஆகியோர் பதிலளிக்க உத்தரவிட்டு, விசாரணையை ஜன.27-ம் தேதிக்கு நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x