Published : 06 Jan 2021 02:27 PM
Last Updated : 06 Jan 2021 02:27 PM

அமைச்சர் காமராஜுக்கு கரோனா: தனியார் மருத்துவமனையில் அனுமதி

உணவுத்துறை அமைச்சர் காமராஜ் அறிகுறியில்லாத கரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட நிலையில், மணப்பாக்கத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

கரோனா தொற்று பரவிய நிலையில் மார்ச் முதல் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு கடந்த 8 மாதங்களாக ஊரடங்கு தளர்வுகளுடன் நீட்டிக்கப்பட்டு வருகிறது. திரையரங்குகளை 100 சதவீத இருக்கைகளுடன் இயக்கலாம் என சமீபத்தில் தமிழக அரசு அறிவித்தது.

தமிழகத்தில் கடுமையான கரோனா தொற்று, தொடர் நடவடிக்கை காரணமாக வெகுவாகக் குறைக்கப்பட்டுள்ளது. ஆனாலும் தினமும் கரோனா தொற்றால் 800 பேரிலிருந்து 900 பேர் வரை பாதிக்கப்படுகின்றனர். சமீபத்தில் ஐஐடியிலும், நட்சத்திர ஹோட்டல்களிலும் கொத்து கொத்தாக கரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் சிகிச்சையில் உள்ளனர்.

கரோனா தொற்றால் அமைச்சர் காமராஜும் தற்போது பாதிக்கப்பட்டிருக்கும் செய்தி வெளியாகியுள்ளது. அவர் உணவுத்துறை அமைச்சராக உள்ளார். தமிழக அரசின் பொங்கல் தொகுப்பு மற்றும் ரூ.2500 பரிசுப் பணத்தைக் கடந்த 4-ம் தேதியிலிருந்து அமைச்சர் காமராஜ் பொதுமக்களைச் சந்தித்து அளித்து வந்தார்.

இந்நிலையில் அவருக்கு அறிகுறியில்லாத கரோனா தொற்று ஏற்பட்டது தெரியவந்தது. உடனடியாக நேற்றிரவு மணப்பாக்கத்தில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அமைச்சர் காமராஜ் சிகிச்சைக்காகச் சென்றார். அவருக்கு அறிகுறியில்லாத கரோனா தொற்று இருப்பது உறுதியானதால், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x