Published : 06 Jan 2021 12:42 PM
Last Updated : 06 Jan 2021 12:42 PM

பொள்ளாச்சி பாலியல் வழக்கு; உயர் நீதிமன்றம் கண்காணிப்பதன் மூலம் மட்டுமே நீதி கிடைக்கும்: கே.எஸ்.அழகிரி வலியுறுத்தல்

பொள்ளாச்சி பாலியல் வழக்கில் குற்றவாளி ஆளுங்கட்சியைச் சேர்ந்தவர் என்பதால் விசாரணை முறையாக நடக்கிறதா என்பதை உயர் நீதிமன்றம் தொடர்ச்சியாக கண்காணித்தால் மட்டுமே பாதிக்கப்பட்ட பெண்களுக்கு நியாயம் கிடைக்கும் என கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி இன்று வெளியிட்ட அறிக்கை வருமாறு:

“தமிழகத்தையே உலுக்கிய பொள்ளாச்சி பாலியல் வழக்கு விசாரணையை மத்திய புலனாய்வுத்துறை மேற்கொண்ட பிறகு, பொள்ளாச்சி நகர அதிமுக மாணவரணி செயலாளர் அருளானந்தம் உள்ளிட்ட மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். ஏற்கனவே, இவ்வழக்கில் ஐந்து பேர் கைது செய்யப்பட்டு, விசாரணை நடைபெற்று வருகிறது.

இளம் பெண்கள் கடத்தப்பட்டு கூட்டு பலாத்காரம் செய்து ஆபாச வீடியோ எடுத்து, அதை வைத்துக் கொண்டு அச்சுறுத்துவது, முகநூலில் வெளியிடுவது போன்றவற்றின் மூலம் பணம் கேட்டு மிரட்டுவது போன்ற பல்வேறு குற்றங்களை செய்ததில் திருநாவுக்கரசு உள்ளிட்ட பலர் சம்மந்தப்பட்டுள்ளனர். நூற்றுக்கணக்கான பெண்கள் பாலியல் பலாத்காரத்திற்கு ஆளாக்கப்பட்ட செய்தி அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது.

பொள்ளாச்சி பாலியல் பலாத்கார சம்பவம் குறித்து பாரபட்சமற்ற விசாரணை நடத்தப்பட வேண்டும், சிபிசிஐடி விசாரணைக்கு பதிலாக சிபிஐ விசாரணை நடத்த வேண்டுமென்ற கோரிக்கை தீவிரமாக எழுப்பப்பட்டது. இதையொட்டி, கடந்த 12 மார்ச் 2019 முதல் சிபிஐ விசாரணை மேற்கொள்ளப்பட்டு ஜனவரி 24, 2020 இல் விசாரணையை முடித்து விட்டதாக கோயம்புத்தூர் நீதிமன்றத்தில் சிபிஐ மனுதாக்கல் செய்தது.

ஆனால், பொள்ளாச்சி பாலியல் பலாத்கார வழக்கில் ஆளுங்கட்சி சம்மந்தப்பட்டவர்கள் மீது விசாரணையோ, கைது நடவடிக்கையோ எடுக்கப்படவில்லை என்று கடும் குற்றச்சாட்டு எழுப்பப்பட்டு வந்தது. இந்நிலையில், மத்திய புலனாய்வுத்துறை சிபிஐ விசாரணையை முடிவுக்கு கொண்டு வந்தது பலத்த சந்தேகத்தை எழுப்பியது. இது, அதிமுக தலையிட்டு சம்மந்தப்பட்ட ஆளுங்கட்சியினரை காப்பாற்றுகிற முயற்சியாகவே கருதப்பட்டது.

இதற்கு சிபிஐ துணை போகிறதோ என்ற சந்தேகம் ஏற்பட்டது. ஆனால், எதிர்கட்சிகளின் அழுத்தத்தின் காரணமாக தற்போது அதிமுக நிர்வாகிகள் கைது செய்யப்பட்டிருக்கின்றனர். காலந்தாழ்ந்து எடுக்கப்பட்ட நடவடிக்கையாக இருந்தாலும் விசாரணையை சென்னை உயர்நீதிமன்றம் தீவிரமாக கண்காணிக்க வேண்டும்.

ஏனெனில், இதில் சம்மந்தப்பட்ட குற்றவாளிகள் அதிமுக துணை சபாநாயகர் ஜெயராமன், அமைச்சர் எஸ்.பி. வேலுமணி ஆகியோருக்கு மிக நெருக்கமானவர்கள் என்பதால் ஆளுங்கட்சியினரின் தலையீடு இல்லாமல் சிபிஐ விசாரணை நடைபெற வேண்டும். ஏற்கனவே சிபிஐ விசாரணை நீதிமன்ற கண்காணிப்பில் இருப்பதால் மத்திய புலனாய்வுத்துறை, குற்றவாளிகள் மீதான விசாரணை சரியான பாதையில் சென்று கொண்டிருக்கிறதா என்பதை சென்னை உயர்நீதிமன்றம் உறுதி செய்ய வேண்டும்.

சென்னை உயர்நீதிமன்றத்தின் தீவிர கண்காணிப்பின் மூலமே குற்றவாளிகளை மத்திய புலனாய்வுத்துறை விசாரணையின் மூலம் கண்டுபிடிக்கப்பட்டு தண்டனைக்கு உள்ளாக்கப்படுகிற நிலை ஏற்படும். இதன்மூலமே பாலியல் பலாத்காரத்திற்கு ஆளாக்கப்பட்ட இளம் பெண்களுக்கு நீதி கிடைக்கும்.

எனவே, தமிழகத்திற்கு தலைக்குனிவை ஏற்படுத்திய அதிமுகவினர் சம்மந்தப்பட்ட பொள்ளாச்சி பாலியல் பலாத்கார வழக்கில் குற்றவாளிகளை தண்டிப்பதன் மூலமே இந்த களங்கத்தை துடைக்க முடியும்”.

இவ்வாறு கே.எஸ்.அழகிரி வலியுறுத்தியுள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x