திரையரங்குகளில் 100 சதவீதம் இருக்கைகளுக்கு அனுமதி; மீண்டும் எச்சரிக்கும் பிரதீப் கவுர்

பிரதீப் கவுர்: கோப்புப்படம்
பிரதீப் கவுர்: கோப்புப்படம்
Updated on
1 min read

திரையரங்குகளில் 100 சதவீதம் பார்வையாளர்களை அனுமதிப்பது ஆபத்தானது என, தேசிய தொற்று நோய் தடுப்பு மையத்தின் துணை இயக்குநர் பிரதீப் கவுர் மீண்டும் எச்சரித்துள்ளார்.

கரோனா வைரஸ் உலகம் முழுவதும் பரவத் தொடங்கிய நிலையில் இந்தியாவிலும் கரோனா வைரஸ் பரவத் தொடங்கியது. இதையடுத்து, கடந்த மார்ச் மாதம் 25-ம் தேதி முதல் இந்தியா முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. பொதுமக்கள் வீட்டில் முடங்கினர். பொதுப் போக்குவரத்து தடை செய்யப்பட்டது.

பொதுமக்கள் கூடும் நிகழ்ச்சிகள், மத வழிபாடுகள், பொதுக் கூட்டங்களுக்குத் தடை விதிக்கப்பட்டது. திரையரங்குகள், ஷாப்பிங் மால்கள், பள்ளிகள், கல்லூரிகள் மூடப்பட்டன. அவசியமின்றி பொதுமக்கள் வெளியில் வருவதற்குத் தடை விதிக்கப்பட்டது.

இந்தியாவில் கரோனா பாதிப்பு ஒரு கோடியைக் கடந்தது. தமிழகத்தில் மொத்த பாதிப்பு எட்டு லட்சத்தைக் கடந்தது. இந்நிலையில், தமிழகத்தில் கரோனா தொற்று படிப்படியாக குறைந்து வருகிறது.

உலகம் முழுவதும் கரோனா தொற்று குறைந்து வந்த நிலையில் இங்கிலாந்தில் திடீரென உருமாற்றம் பெற்ற கரோனா வைரஸ் காரணமாக மீண்டும் தொற்று வேகமாகப் பரவத் தொடங்கியுள்ளது. இதன் காரணமாக இங்கிலாந்தில் மீண்டும் முழு அடைப்பு அமல்படுத்தப்பட்டது.

இந்நிலையில், திரையரங்குகளில் 100 சதவீத இருக்கைகளுக்கு அனுமதி அளித்து தமிழக அரசு நேற்று முன்தினம் (ஜன. 04) அரசாணை வெளியிட்டது. அதில், உரிய பாதுகாப்பு நடைமுறைகளைத் திரையரங்குகள் கடைப்பிடித்து 100% இருக்கைகளுடன் இயங்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், திரையரங்குகளில் 100 சதவீத பார்வையாளர்களை அனுமதிப்பது ஆபத்தானது என, தேசிய தொற்று நோய் தடுப்பு மையத்தின் துணை இயக்குநர் பிரதீப் கவுர் ஏற்கெனவே எச்சரித்திருந்தார்.

இந்நிலையில், இந்த எச்சரிக்கையை மீண்டும் அவர் விடுத்துள்ளார்.

இது தொடர்பாக, அவர் தன் ட்விட்டர் பக்கத்தில், உள்ளரங்கு, காற்றோட்டமின்மை, அதிக நேரம் அங்கு இருப்பது, கூட்டமாக இருப்பது, கூச்சலிடுவது, முகக்கவசம் இல்லாமல் இருப்பது போன்றவை, கரோனா தொற்றுப் பரவலை மிகவும் ஆபத்தான நிலைக்கு இட்டுச் செல்லும் என அவர் எச்சரித்துள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in