Published : 06 Jan 2021 03:13 AM
Last Updated : 06 Jan 2021 03:13 AM

சட்டப்பேரவை தேர்தலில் பயன்படுத்தப்பட உள்ள வாக்குப்பதிவு இயந்திரங்களின் முதல்கட்ட பரிசோதனை தொடக்கம்: தலைமை தேர்தல் அதிகாரி தகவல்

தமிழக சட்டப்பேரவை தேர்தலுக்கு பயன்படுத்தப்படும் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள், விவிபாட் இயந்திரங்களின் முதல்கட்ட பரிசோதனை நடந்து வருவதாக தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹு தெரிவித்தார்.

தமிழகத்தில் தற்போதுள்ள 15-வது சட்டப்பேரவையின் பதவிக்காலம் வரும் மே மாதம் முடிவடைய உள்ளது. இதையொட்டி, தமிழக சட்டப்பேரவை பொதுத் தேர்தலை நடத்துவதற்கான அடிப்படை பணிகளை தேர்தல் ஆணையம் மேற்கொண்டு வருகிறது. தமிழகத்தில் ஒரே கட்டமாக தேர்தலை நடத்தி முடிக்க வேண்டும் என்று அனைத்து அரசியல் கட்சிகளும் கோரிக்கை விடுத்துள்ள நிலையில், இதுகுறித்து தேர்தல்ஆணையம் தீவிரமாக ஆலோசித்து வருகிறது.

தற்போது கரோனா காலம் என்பதால், பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹுவுடன் இந்திய தேர்தல் ஆணையர்கள் அவ்வப்போது ஆலோசித்து வருகின்றனர்.

தமிழகத்தில் தற்போது 68,374 வாக்குச்சாவடிகள் உள்ளன.கரோனா தடுப்பு விதிமுறைகளின்படி, சமூக இடைவெளி பின்பற்றப்பட வேண்டும் என்பதால், ஒரு வாக்குச்சாவடிக்கு ஆயிரம் வாக்காளர்கள் என்ற வகையில் கூடுதல் வாக்குச்சாவடிகள் அமைக்க தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியது.

கூடுதலாக வாக்குச்சாவடிகள்

அதன்படி, தமிழகத்தில் மேலும் 30 ஆயிரம் வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட உள்ளன. ஏற்கெனவே உள்ள மையங்களில் கூடுதலாக இடம் இருந்தால் அங்கு வாக்குச்சாவடி அமைக்கவும், இடம் இல்லாத பட்சத்தில் அருகே உள்ள இடங்களை தேர்வு செய்யவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இதற்கிடையில், தமிழகத்தில் பல்வேறு இடங்களில் உள்ள கிடங்குகளில் வைக்கப்பட்டுள்ள மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களின் முதல்கட்ட பரிசோதனை பணி தொடங்கியுள்ளது.

பணிகள் தீவிரம்

இதுகுறித்து தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹு கூறும்போது, ‘‘தேர்தலுக்காக பயன்படுத்தப்படும் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள், விவிபாட் இயந்திரங்களின் முதல்கட்ட பரிசோதனை பணிகள் தொடங்கப்பட்டு, தற்போது அரியலூர், காஞ்சிபுரம், புதுக்கோட்டை, ராமநாதபுரம், சிவகங்கை, திருவாரூர், வேலூர் மாவட்டங்களில் இப்பணிகள் முடிவடைந்துள்ளன. மற்ற 30 மாவட்டங்களிலும் பணி தொடர்ந்து நடந்து வருகிறது’’ என்று தெரிவித்தார்.

தமிழகத்தில் தற்போது 30 ஆயிரம் வாக்குச்சாவடிகள் கூடுதலாக அமைக்கப்பட உள்ளதால், மகாராஷ்டிரா, மத்திய பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் இருந்து மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள், விவிபாட் இயந்திரங்கள் வரவழைக்கப்பட உள்ளன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x