Published : 06 Jan 2021 03:13 AM
Last Updated : 06 Jan 2021 03:13 AM

ஓஎம்ஆர் சாலை பள்ளங்களில் தேங்கி நிற்கும் மழைநீரில் மெதுவாக செல்லும் வாகனங்களால் போக்குவரத்து நெரிசல்; சாலையை சீரமைக்க நெடுஞ்சாலைத் துறை தயக்கம்

சென்னை மற்றும் புறநகர் பகுதிமக்கள் புதுச்சேரி மற்றும் அதன் சுற்றுப்புற மாவட்டங்களுக்கு ஈசிஆர்சாலை வழியாக செல்வதற்காக ஓஎம்ஆர் சாலையை பிரதானமாக பயன்படுத்தி வருகின்றனர்.

தற்போது, திருப்போரூர் முதல்காலவாக்கம் வரையிலான ஓஎம்ஆர் சாலை ‘நிவர்' மற்றும் ‘புரெவி' புயலின்போது பெய்த கனமழையால் கடுமையாக சேதமடைந்துள்ளது. இதனால், வாகன ஓட்டிகள் குறிப்பிட்ட 5 கி.மீ. தொலைவு கொண்ட சாலையை கடந்து செல்ல சுமார் அரைமணி நேரம் ஆகிறது. மேலும், சாலையில் தேங்கியுள்ள புழுதி பறப்பதால் சாலையோர கடைகள் மற்றும் வாகன ஓட்டிகள் கடுமையாக பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

தற்போது மழை பெய்து வருவதால் சாலையில் உள்ள பள்ளங்கள் தெரியாதவாறு மழைநீர் தேங்கியுள்ளது. இதனால் வாகனங்கள் விபத்துக்குள்ளாகின்றன.

எனவே, இச்சாலையை சீரமைக்கக் கோரி உள்ளூர் மக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்து வருகின்றனர். ஆனால், நெடுஞ்சாலைத் துறை பாதாள சாக்கடை திட்டப் பணிகளை காரணம் கூறி தொடர்ந்து சாலைசீரமைப்பு பணிகளை தாமதப்படுத்தி வருகிறது.

இதுகுறித்து சமூக ஆர்வலர்கள் கூறும்போது, "திருப்போரூர் பேரூராட்சியில் ரூ.42 கோடி மதிப்பீட்டில் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் பாதாள சாக்கடை திட்டப் பணிகளை கடந்த 2018-ம் ஆண்டு முதல் மேற்கொண்டு வருகிறது. பாதாள சாக்கடைக்காக தோண்டப்பட்ட பள்ளங்களால் ஓஎம்ஆர் சாலையில் செல்லும் வாகனங்கள் கடும் பாதிப்புக்கு உள்ளாகி வருகின்றன. இப்பணிகள் 3 ஆண்டுகள் கடந்தும் நிறைவு பெறவில்லை.

இந்நிலையில், நெடுஞ்சாலைத் துறை பாதாள சாக்கடை பணிகள் முழுவதும் நிறைவடைந்தால் மட்டுமே, சீரமைப்பு பணிகளை மேற்கொள்ள முடியும் என தொடர்ந்து கூறி வருகிறது. இதனால், ஓஎம்ஆர் சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதோடு, இருசக்கர வாகனங்கள் விபத்தில் சிக்கி வருகின்றன. அதனால், குறிப்பிட்ட பகுதி வரையிலாவது ஓஎம்ஆர் சாலையை சீரமைத்தால் வாகன ஓட்டிகள் விபத்து அச்சமின்றி பயணிப்பர்" என்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x