Published : 01 Oct 2015 09:42 PM
Last Updated : 01 Oct 2015 09:42 PM

இலங்கை சிறையில் உள்ள தமிழக மீனவர்களை மீட்கக் கோரி பிரதமருக்கு முதல்வர் கடிதம்

இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டுள்ள தூத்துக்குடி மீனவர்கள் 7 பேர், ஏற்கெனவே பிடிக்கப்பட்ட 21 மீனவர்கள் மற்றும் அவர்களது படகுகளை விடுவிக்க நடவடிக்கை எடுக்கக் கோரி பிரதமர் மோடிக்கு முதல்வர் ஜெயலலிதா கடிதம் எழுதியுள்ளார்.

இதுதொடர்பாக பிரதமர் நரேந்திர மோடிக்கு முதல்வர் ஜெயலலிதா எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:

தூத்துக்குடி மாவட்டம் திரேஸ்புரத்தை சேர்ந்த 7 மீனவர்கள் கடந்த 26-ம் தேதி மீன்பிடிக்கச் சென்றனர். அவர்களை மன்னார் வளைகுடா பகுதியில் இலங்கை கடற்படையினர் 29-ம் தேதி கைது செய்து நீர்க்கொழும்புவுக்கு கொண்டு சென்றுள்ளனர். இது கடந்த ஒரு வாரத்தில் நடந்த 3-வது சம்பவம்.

மீனவர்களின் வாழ்வாதாரப் பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வு காண, தமிழக அரசு விட்டுக்கொடுக்கும் மனப்பாங்கில் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. ஆனால், இலங்கை அரசின் நடவடிக்கைகளால் தமிழக மீனவர்களின் நிலைமை பாதுகாப்பற்றதாக மாறிவருகிறது. தற்போது வரை 30 படகுகள் பிடிக்கப்பட்டு இலங்கையில் உள்ளன. விரைவில் பருவமழை தொடங்க உள்ள நிலையில், படகுகள் பழுதுபார்க்க முடியாத அளவுக்கு மோசமாகும் சூழல் உள்ளது.

இந்த விவகாரத்தில் பிரதமர் தலையிட்டு, பாரம்பரிய கடற்பகுதியில் தமிழக மீனவர்கள் சுதந்திரமாகவும், அமைதியாகவும் மீன்பிடிக்க தூதரக ரீதியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும், தூத்துக்குடியை சேர்ந்த 7 மீனவர்கள் மற்றும் அவர்களது படகுகளை விடுவிப்பதுடன், ஏற்கெனவே இலங்கை சிறையில் உள்ள தமிழக மீனவர்கள் 21 பேர் மற்றும் அவர்களது 30 படகுகளையும் விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு கடிதத்தில் முதல்வர் கூறியுள்ளார்.



FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x