சித்த மருத்துவர்களின் வாரிசுகளுக்கு அங்கீகாரம்?- சுகாதாரத்துறை செயலர் பதிலளிக்க உத்தரவு

சித்த மருத்துவர்களின் வாரிசுகளுக்கு அங்கீகாரம்?- சுகாதாரத்துறை செயலர் பதிலளிக்க உத்தரவு
Updated on
1 min read

தமிழகத்தில் பதிவு பெற்ற சித்த மருத்துவர்களின் சட்டப்பூர்வ வாரிசுகளை சித்த மருத்துவர்களாக அங்கீகரிக்கக்கோரிய வழக்கில் சுகாதாரத்துறை செயலர் பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மதுரை செல்லூரைச் சேர்ந்த சித்த மருத்துவர் ஜி. ரங்கராஜன் (80), உயர் நீதிமன்றக் கிளையில் தாக்கல் செய்த மனு:

தமிழகத்தில் 2 அரசு சித்த மருத்துவக் கல்லூரிகள் மட்டுமே உள்ளன. இதனால் இந்தக்கல்லூரிகளில் பிஎஸ்எம்எஸ் முடிக்கும் மருத்துவர்களின் எண்ணிக்கை குறைவாக உள்ளது.

சித்த மருத்துவத்தில் பல்வேறு நோய்களுக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது. தற்போது உலகம் முழுவதும் அச்சுறுத்தி வரும் கரோனா நோய்க்கும் சித்த மருத்துவத்தில் சிகிச்சை அளிக்கப்படுகிறது. இருப்பினும் சித்த மருத்துவத்தைப் பாதுகாக்கவும், மேம்படுத்தவும் அரசுகள் நடவடிக்கை எடுக்கவில்லை.

பதிவு பெற்ற சித்த மருத்துவர்களின் சட்டப்பூர்வ வாரிசுகள் சித்த மருந்து தயாரிப்பு மற்றும் சிகிச்சை அளிப்பதில் பயிற்சி பெற்றுள்ளனர். பதிவு பெற்ற சித்த மருத்துவர்களின் சித்த மருத்துவப் பயிற்சி பெற்ற சட்டப்பூர்வ வாரிசுகளுக்கு நேர்முகத் தேர்வு நடத்தி அவர்களை சித்த மருத்துவர்களாக அங்கீகரிக்க தமிழக அரசுக்கு உத்தரவிட வேண்டும்.

இந்த மனு நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ், எஸ்.ஆனந்தி அமர்வில் விசாரணைக்கு வந்தது. மனு தொடர்பாக சுகாதாரத் துறைச் செயலர் பதிலளிக்க உத்தரவிட்டு அடுத்த விசாரணையை 2 வாரங்களுக்கு நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in