Last Updated : 05 Jan, 2021 04:54 PM

 

Published : 05 Jan 2021 04:54 PM
Last Updated : 05 Jan 2021 04:54 PM

கேரளாவில் பறவைக் காய்ச்சல் எதிரொலி: புளியரையில் தடுப்பு நடவடிக்கைகள் தீவிரம்

தென்காசி

கேரளாவில் பறவைக் காய்ச்சல் கண்டறியப்பட்டுள்ளதால் அதன் எல்லையையொட்டி உள்ள புளியரையில் கால்நடை பராமரிப்புத் துறையினர் தடுப்பு நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர்.

தென்காசி மாவட்டம், புளியரையில் கால்நடை பராமரிப்புத் துறை சார்பில் பறவைக் காய்ச்சல் நோய்த் தடுப்பு முகாம் இன்று தொடங்கப்பட்டது. கேரளாவில் இருந்து வரும் வாகனங்களுக்கு கிருமிநாசினி தெளித்து தமிழக எல்லைக்குள் அனுமதிக்கின்றனர். கால்நடை மருத்துவர் ஒருவர் தலைமையில் 5 பேர் கொண்ட குழுவினர் இந்தப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

தினமும் 3 ஷிப்ட்களில் 24 மணி நேரமும் தலா 5 பேர் கொண்ட குழுவினர் இந்தப் பணியில் ஈடுபடுகின்றனர்.

இதுகுறித்து கால்நடை மருத்துவர் ஜெயபால்ராஜ் கூறும்போது, “கேரள மாநிலம் ஆலப்புழா, கோட்டயம் பகுதிகளில் வாத்துகளுக்குப் பறவைக் காய்ச்சல் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இதனால், தமிழகத்துக்குள் பறவைக் காய்ச்சல் நோய் பரவாமல் தடுக்க 5-ம் தேதி தொடங்கி 90 நாட்கள் புளியரையில் பறவைக் காய்ச்சல் நோய்த் தடுப்பு முகாம் நடைபெறும்.

கேரளாவில் இருந்து வாத்து, கோழி, பறவைக் கழிவுகள், முட்டைகள் கொண்டு வரும் வாகனங்கள் தமிழகத்துக்குள் அனுமதிக்கப்படாமல் மீண்டும் கேரளாவுக்கே திருப்பி விடப்படுகின்றன. மற்ற வாகனங்களுக்கு கிருமிநாசினி தெளிக்கப்பட்டு அனுப்பப்படுகின்றன” என்றார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x