Published : 05 Jan 2021 08:06 AM
Last Updated : 05 Jan 2021 08:06 AM
அனைவருக்கும் ஒரு குறிப்பிட்ட காலவரம்புக்குள் கரோனா தடுப்பூசி போட்டால்தான் சமூக எதிர்ப்பு சக்தியை பெற முடியும் என்று சமூக சமத்துவத்துக்கான டாக்டர்கள் சங்கம் அறிவுறுத்தியுள்ளது.
இதுதொடர்பாக சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜி.ஆர்.ரவீந்திரநாத் சென்னையில் செய்தியாளர்களிடம் நேற்று கூறியதாவது:
இந்தியாவில் கரோனா தடுப்பூசி போடுவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவது பாராட்டுக்குரியது. அனைவருக்கும் தடுப்பூசி இலவசமாக வழங்கப்படும் என்று மத்திய அரசு அறிவித்திருப்பது வரவேற்புக்குரியது. எனினும், ஒரு குறிப்பிட்ட கால வரம்புக்குள் அனைவருக்கும் தடுப்பூசி போட வேண்டும். அப்போதுதான் சமூக எதிர்ப்பு சக்தியை தடுப்பூசிகள் மூலம் பெற முடியும்.
முழுமையான பலன் கிடைக்கும். இந்த கால வரம்பு குறித்த அறிவிப்பை மத்திய அரசு வெளியிட வேண்டும்.
கரோனா தடுப்பில் தடுப்பூசி சிறந்த பங்காற்றும் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை. ஆனால், தடுப்பூசி வழங்குவதில் கூடுதல் கவனம் வேண்டும். இந்தியாவில் பயன்படுத்தப்பட உள்ள தடுப்பூசிகளின் திறன், பாதுகாப்பு குறித்த ஆய்வுகளின் முடிவுகளை வெளிப்படையாக வெளியிட வேண்டும். அது உலக சுகாதார நிறுவனம் மற்றும் சர்வதேச மருத்துவர்களின் பார்வைக்கு வைக்கப்பட வேண்டும்.
பயனாளிகளுக்கு எந்த நிறுவனத்தின் தடுப்பூசி வழங்கப்படுகிறது என்ற விவரத்தை வெளியிட வேண்டும். அனைவருக்கும் முதல்
டோஸாக வழங்கப்பட்ட தடுப்பூசியையே 2-வது டோஸாகவும் வழங்க வேண்டும். 2 கட்ட பரிசோதனைகளில் தடுப்பூசிகள் பாதுகாப்பானவை என அரசு அறிவித்துள்ள போதிலும், பயனாளிகளுக்கு ஏதேனும் பாதிப்பு ஏற்பட்டால் உரிய நிவாரணம் வழங்க
வேண்டும். தடுப்பூசி குறித்து அறிவியலுக்கு புறம்பான, தவறான கருத்துகளை பரப்புவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்
டும். இவ்வாறு அவர் கூறினார்.
சங்கத்தின் மாநில செயலாளர் ஏ.ஆர்.சாந்தி உடன் இருந்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT