Published : 05 Jan 2021 07:54 AM
Last Updated : 05 Jan 2021 07:54 AM

பொங்கல் பரிசு டோக்கனில் அரசியல் கட்சி தலைவர்களின் படங்கள் இடம்பெறக் கூடாது: உயர் நீதிமன்றம் உத்தரவு 

பொங்கல் பரிசு டோக்கனில் எந்தவொரு அரசியல் தலைவரின் படங்களும் இடம்பெறக் கூடாது என உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

அரசுப்பணத்தில் வழங்கப்படும் பொங்கல் பரிசுத்தொகை மற்றும் இலவச பொருட்களுக்கான டோக்கனில் தமிழக முதல்வர், துணைமுதல்வர், அமைச்சர் உள்ளிட்ட ஆளுங்கட்சியினரின் புகைப்படங்கள் இடம்பெறுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து திமுக சார்பில் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. அப்போது அரசு தரப்பில், ரேஷன் கடை ஊழியர்கள் மூலமாக விநியோகிக்கப்படும் அதிகாரப்பூர்வ டோக்கனுக்கு மட்டுமே ரூ.2,500 ரொக்கம், பரிசுப்பொருட்கள் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டது.

அதைப்பதிவு செய்த விடுமுறை கால அமர்வு இதுகுறித்து அரசு தரப்பில் சுற்றறிக்கை பிறப்பிக்க வேண்டும் என உத்தரவிட்டது. அதன்படி அரசு சுற்றறிக்கை பிறப்பித்தது. இந்நிலையில் இந்த வழக்கு தலைமை நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜி மற்றும் நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி ஆகியோர் அடங்கிய அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது திமுக தரப்பில் மூத்த
வழக்கறிஞர் பி.வில்சன் ஆஜரானார். அரசு தரப்பில் இதுதொடர்பாக ஏற்கெனவே சுற்றறிக்கை பிறப்பிக்கப்பட்டுள்ளதாகக் கூறி நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது. அதைப்பதிவு செய்து கொண்டநீதிபதிகள், பொங்கல் பரிசுக்கான டோக்கனில் எந்தவொரு அரசியல்தலைவரின் படங்களும் இடம் பெறக் கூடாது என உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்துள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x