கோவளத்தில் கடல் அ ரிப்பால் வீடுகள் சேதம்: மீன்வளத்துறை அலட்சியப்படுத்துவதாக புகார்

கோவளத்தில் கடல் அ ரிப்பால் வீடுகள் சேதம்:  மீன்வளத்துறை அலட்சியப்படுத்துவதாக புகார்
Updated on
1 min read

கடலரிப்பால் கோவளத்தில் வீடு கள் சேதமடைந்து வருகின்றன. தடுப்பு நடவடிக்கை எடுக்காமல் மீன்வளத்துறை அலட்சியம் காட்டி வருவதாக மீனவர்கள் புகார் தெரிவித்துள்ளனர்.

திருப்போரூர் ஒன்றியத் துக்குட்பட்ட கோவளம் புதுமசூதி பகுதியில், பல்வேறு சமுதாயத்தை சேர்ந்த மீனவர்கள் கடற்கரை அருக பட்டா நிலங்களில் குடி யிருந்து வருகின்றனர். கடந்த சில மாதங்களாக கோவளம் பகுதியில் கடல் அரிப்பு ஏற்பட்டு கட்டிடங்கள் சரிந்து வருகின்றன. இதில் சில குடியிருப்புகள் முற்றிலும் கடல் நீரால் அடித்து செல்லப்பட்டுள்ளன.

இதைத் தடுக்க தூண்டில் வளைவு அல்லது பாறைகளினால் தடுப்புகள் அமைக்க வேண்டும் என மீனவர்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர். ஆனால்இந்த விவகாரத்தில் மீன்வளத்துறை அலட்சியம் காட்டுவதாக மீனவர்கள் புகார் தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து, அப்பகுதி மீனவர்கள் கூறும்போது, ‘கடந்த சில நாட்களில் மட்டும் 200 மீட்டர் கடல்நீர் முன் வந்துள்ளது. கடல் அரிப்பால் இரவு நேரங்களில் வீடுகளில் தங்க அச்ச மாக உள்ளது. முதல்வரின் தனிப்பிரிவில் மனு அளிக்க முடிவு செய்துள்ளோம். கோவளத்தில் கடலரிப்பை தடுக்க தூண்டில் வளைவு அமைக்க வேண்டும் என, மீன்வளத்துறையிடம் வலியுறுத்தி வருகிறோம்.

மீன்வளத்துறை இணை இயக்குநரை நேரில் தொடர்பு கொள்ள முடிவதில்லை. எங்கள் பகுதிக்கும் அவர் வருவதில்லை. இதனால், எங்களன் துயரங்களை யாரிடம் கூறுவதென்று தெரியவில்லை. கடந்தசில நாட்களாக, கரையில் நிறுத்தப்பட்டிருக்கும் படகுகளையும் அலை இழுத்துச் சென்றது. இதுதொடர்பாக, மாவட்ட ஆட்சியரிடம் நேரில் புகார் தெரிவித்தும் நடவடிக்கை இல்லை என தெரிவித்தனர்.

கோவளம் ஊராட்சி தலைவர் ஜானகிராமன் கூறும்போது, ‘கடற்கரை பகுதி என்பதால், ஊராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க அதிகாரம் இல்லை. இதனால், மீனவர்கள் மற்றும் பொதுமக்கள் கடுமையான பாதிப்புக்குள்ளாகியுள்ளனர் என தெரிவித்தார். காஞ்சிபுரம் மாவட்ட மீன்வளத்துறை இணை இயக்குநர் கிரிஜா கருத்து தெரிவிக்கையில், ‘கோவளம் பாதிப்பு தொடர்பாக அரசிடம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக, மீனவர்கள் யாரும் என்னை தொடர்பு கொள்ள வில்லை. தூண்டில் வளைவு அமைப்பது தொடர்பாக தனக்கு எந்தவித தகவலும் இல்லை’ என்றார்.

இப்பிரச்சினை பற்றி காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் கஜலட்சுமியிடம் கேட்டபோது, ‘கோவளத்தில் கடலரிப்பை தடுப்பதற்காக, மீன்வளத்துறையினர் என்னென்ன நடவடிக்கைகள் மேற்கொண்டுள்ளனர் மற்றும் பாதிப்புகள் குறித்து, மீன்வளத்துறையிடம் விசாரித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும்’ என்றார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in