Last Updated : 04 Jan, 2021 07:18 PM

 

Published : 04 Jan 2021 07:18 PM
Last Updated : 04 Jan 2021 07:18 PM

திருப்பத்தூர் கூட்டுறவுச் சர்க்கரை ஆலையில் நடப்பாண்டு கரும்பு அரவை தொடக்கம்

திருப்பத்தூர் கூட்டுறவுச் சர்க்கரை ஆலையில் நடப்பாண்டுக்கான கரும்பு அரவையை அமைச்சர்கள் கே.சி.வீரமணி, நிலோபர் கஃபீல் ஆகியோர் இன்று தொடங்கி வைத்தனர்.

திருப்பத்தூர் மாவட்டம், நாட்றாம்பள்ளி அடுத்த கேத்தாண்டப்பட்டியில் கூட்டுறவுச் சர்க்கரை ஆலை இயங்கி வருகிறது. இங்கு 250 தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர். கரும்பு வரத்துக் குறைவு காரணமாகக் கடந்த ஆண்டு (2019-20) கரும்பு அரவை நிறுத்தப்பட்டது. இதனால் தொழிலாளர்கள் வேலையை இழந்து பாதிக்கப்பட்டனர். இதைத் தொடர்ந்து, நடப்பாண்டும் கரும்பு அரவை தொடங்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக ஆலை நிர்வாகம் கடந்த 2 மாதங்களுக்கு முன்பு அறிவித்தது.

இதற்கு எதிர்ப்புத் தெரிவித்து அனைத்துத் தொழிற்சங்க கூட்டுக் குழுவினர் கூட்டுறவுச் சர்க்கரை ஆலை முன்பாகத் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்துத் தொழிலாளர்களுடன் பேச்சுவார்த்தை நடத்திய ஆலை நிர்வாகம், 2020-21ஆம் ஆண்டுக்கான கரும்பு அரவை தொடங்க நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தது. இதையடுத்து, தொழிலாளர்களின் தொடர் போராட்டம் கைவிடப்பட்டது.

இந்நிலையில், நடப்பாண்டுக்கான (2020-21) கரும்பு அரவை இன்று (ஜன.4) தொடங்கியது. இதற்கான நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் சிவன் அருள் தலைமை வகித்தார். கூட்டுறவுச் சர்க்கரை ஆலையின் மேலாண்மை இயக்குநர் (பொறுப்பு) ரஹமதுல்லாகான் முன்னிலை வகித்தார். முன்னதாகக் கரும்பு உற்பத்தி மேம்பாடு அலுவலர் வெற்றிவேந்தன் வரவேற்றார். தமிழக வணிகவரித்துறை அமைச்சர் கே.சி.வீரமணி, தொழிலாளர் நலத்துறை அமைச்சர் நிலோபர் கஃபீல் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாகக் கலந்துகொண்டு கரும்பு அரவையைத் தொடங்கி வைத்தனர்.

இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் சிவன் அருள் கூறும்போது, ''திருப்பத்தூர் கூட்டுறவுச் சர்க்கரை ஆலைத் தொழிலாளர்களின் கோரிக்கையை ஏற்று நடப்பாண்டுக்கான கரும்பு அரவை இன்று தொடங்கப்பட்டுள்ளது. திருப்பத்தூர் கூட்டுறவுச் சர்க்கலை ஆலையில் 30 ஆயிரம் மெட்ரிக் டன் கரும்பு, கள்ளக்குறிச்சி கூட்டுறவுச் சர்க்கரை ஆலையில் 20 ஆயிரம் மெட்ரிக் டன் கரும்பு, ஆம்பூர் சர்க்கரை ஆலையில் 10 ஆயிரம் மெட்ரிக் டன் கரும்பு, போளூர் பகுதியில் இருந்து 3 ஆயிரம் மெட்ரிக் டன் கரும்பு என மொத்தம் 63 ஆயிரம் மெட்ரிக் டன் கரும்பு அரவை செய்ய, நடப்பாண்டில் இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

தினசரி 1,200 முதல் 1,400 டன் வரை அரவை செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் ஏறத்தாழ 2 மாதங்களுக்குத் தொழிலாளர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும். திருப்பத்தூர் மாவட்டத்தில் பருவமழை பரவலாகப் பெய்துள்ளதால் கரும்பு சாகுபடி அதிக அளவில் இருக்கிறது. இதன் மூலம் கரும்பு அரவை தொடர்ந்து கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது தவிர செங்கம், ஊத்தங்கரை, ஆலங்காயம் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து கரும்பை, அரவைக்காகக் கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

மேலும், தேசிய வேளாண்மை அபிவிருத்தி திட்டத்தின் கீழ் ஆலையில் பதிவு செய்துள்ள உறுப்பினர்களுக்குப் பல்வேறு மானியங்கள் வழங்கப்பட்டு வருகின்றன. அவற்றை உறுப்பினர்கள் நல்ல முறையில் பயன்படுத்திக்கொள்ள வேண்டும்'' என்று ஆட்சியர் சிவன் அருள் தெரிவித்தார்.

இந்நிகழ்ச்சியில், திருப்பத்தூர் கூட்டுறவுச் சர்க்கரை ஆலைத் தலைவர் ஏ.ஆர்.ராஜேந்திரன், அனைத்துத் தொழிற்சங்கக் கூட்டுக்குழுத் தலைவர் அன்பழகன், நிர்வாகக் குழு உறுப்பினர்கள், கரும்பு விவசாயிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x