Last Updated : 04 Jan, 2021 06:43 PM

 

Published : 04 Jan 2021 06:43 PM
Last Updated : 04 Jan 2021 06:43 PM

10 நாட்களுக்குள் கரோனா தடுப்பூசி புதுச்சேரி வருகிறது: முதல்வர் நாராயணசாமி தகவல்

கரோனா தடுப்பூசி பத்து நாட்களுக்குள் வர உள்ளதாகவும், ஊசி போடப் புதுவையின் நான்கு பிராந்தியங்களிலும் 41 மையங்கள் அமைக்கப்பட்டுள்ளதாகவும் முதல்வர் நாராயணசாமி தெரிவித்துள்ளார்.

புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி இன்று செய்தியாளர்களிடம் கூறியதாவது:

''கரோனா தடுப்பூசி வந்ததும் புதுச்சேரியில் நோயாளிகளுக்குச் செலுத்த அனைத்து ஏற்பாடுகளையும் செய்துள்ளோம். கரோனா தடுப்பூசிகளைப் பாதுகாப்பாக வைக்க நடவடிக்கை எடுத்துள்ளோம். புதுச்சேரியில் 36 இடங்கள், காரைக்காலில் 15 இடங்கள், மாஹேவில் 3 இடங்கள், ஏனாமில் ஒரு இடம் என மொத்தம் 55 இடங்களில் மருந்துகளைத் தயார் நிலையில், தேவையான குளிர்சாதன வசதியுடன் பாதுகாக்கப்படும்.

புதுச்சேரியில் முதற்கட்டமாக மருத்துவக் களப் பணியாளர்கள் அனைவருக்கும் தடுப்பூசி போட மத்திய சுகாதாரத் துறை கடிதம் அனுப்பியுள்ளது. அதன்படி 14 ஆயிரம் பேருக்குத் தடுப்பூசி போடப்படும். ஊசி போடும் மையங்கள் புதுச்சேரியில் 29 இடங்கள், காரைக்காலில் 8 இடங்கள், மாஹேவில் 3 இடங்கள், ஏனாமில் ஒரு இடம் என 41 இடங்கள் திட்டமிடப்பட்டுள்ளன. முதல்கட்ட ஊசி போடும் பணி ஒரு வாரத்துக்குள் நிறைவடையும்.

இரண்டாவது கட்டமாக, களப்பணியில் ஈடுபடும் போலீஸார், வருவாய்த்துறை, உள்ளாட்சித் துறை, ஆசிரியர்கள், அங்கன்வாடி ஊழியர்கள், பொதுப்பணித் துறைப் பணியாளர்கள், துப்புரவுத் துறைப் பணியாளர்கள் ஆகியோருக்குக் கரோனா தடுப்பூசி போடப்படும்.

தடுப்பூசிகள் பத்து நாட்களுக்குள் வரவுள்ளன. மத்திய உள்துறை இணை அமைச்சர் கிஷன் ரெட்டி, இலவசமாகத் தடுப்பூசியைப் புதுச்சேரிக்குத் தருவதாகத் தெரிவித்துள்ளார். அதை வாங்கி மத்திய அரசின் அறிவுறுத்தல்படி, கரோனா பாதிப்புள்ளோருக்குச் செலுத்த நடவடிக்கை எடுக்கப்படும். இல்லையென்றால் மாநில அரசு நிதியில் இருந்து செய்யத் தயாராக இருக்கிறோம்''.

இவ்வாறு முதல்வர் நாராயணசாமி தெரிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x