Last Updated : 03 Jan, 2021 08:33 PM

 

Published : 03 Jan 2021 08:33 PM
Last Updated : 03 Jan 2021 08:33 PM

கட்சி தொடங்காததால் ஏமாற்றம்: பாஜகவில் இணைந்த மதுரை ரஜினி ரசிகர்கள்

மதுரை

புதிய கட்சி தொடங்கும் முடிவை ரஜினி கைவிட்ட நிலையில் மதுரை ரஜினி ரசிகர் மன்றத்தினர் பாஜகவில் இணைந்தனர்.

ஜனவரி மாதம் புதிய அரசியல் கட்சித் தொடங்கப் போவதாகவும், அதற்கான அறிவிப்பை டிசம்பர் 31-ல் வெளியிடுவதாகவும் நடிகர் ரஜினிகாந்த் கடந்த மாதம் அறிவித்தார். புதிய கட்சிக்கு தலைமை ஒருங்கிணைப்பாளர், மேற்பார்வையாளர் நியமிக்கப்பட்டனர்.

இந்நிலையில் திடீர் உடல் நலக்குறைவு காரணமாக ஹைதராபாத் அப்பல்லோ மருத்துவமனையில் ரஜினி சேர்ந்தார். சிகிச்சை முடிந்து வீடு திரும்பிய நிலையில் கட்சி தொடங்கும் முடிவை கைவிடுவதாக டிச. 29-ல் அறிவித்தார்.

பல ஆண்டுகளாக ரஜினி ரசிகர் மன்றத்தில் நிர்வாகிகளாக இருந்தவர்கள், ரஜினியின் புதிய கட்சி அறிவிப்பால், ஜனவரிக்குப் பிறகு கரை வேட்டி கட்டி கட்சி நிர்வாகியாக வலம் வரலாம் என நினைத்திருந்தனர். கட்சி தொடங்கும் முடிவை ரஜினி கைவிட்டதால், ரசிகர் மன்ற நிர்வாகிகள் அதிருப்தி அடைந்துள்ளனர்.

இந்நிலையில் மதுரை ரஜினி ரசிகர் மன்ற நிர்வாகிகள் பலர் பாஜகவில் இணைந்துள்ளனர். மதுரை ஒன்றாம் பகுதி ரஜினி ரசிகர் மன்ற செயலர் செந்தில் என்ற செல்வமாணிக்கம். இவர் ரஜினி குடும்பத்துக்கு நெருக்கமானவர்.

ரஜினி மீதான அதீத அன்பு காரணமாக தன் பெயரை செந்தில்பாபா என மாற்றிக் கொண்டவர். ரஜினி கட்சி தொடங்காததால் இவர் தனது ஆதரவாளர்களுடன் பாஜகவில் இணைந்தார்.

மதுரை புறநகர் மாவட்ட பாஜக தலைவர் மகா சுசீந்திரன் தலைமையில் செந்தில் தலைமையில் 28-க்கும் மேற்பட்ட ரஜினி ரசிகர் மன்றத்தினர் பாஜகவில் இணைந்தனர்.

இது குறித்து செந்தில் கூறுகையில், ரஜினி உடல் நிலையை காரணம் காட்டி கட்சி தொடங்கும் முடிவை கைவிட்டுள்ளார். ரஜினியின் பாதை ஆன்மிக அரசியல்.

பாஜக ஆன்மிக அரசியல் தான் செய்கிறது. இதனால் பாஜகவில் சேர்ந்து மக்கள் பணிபுரிய முடிவு செய்துள்ளோம் என்றார்.
கட்சியில் இணைந்த 2-வது நாளில் செந்திலுக்கு வண்டியூர் மண்டல பாஜக செயலர் பதவி வழங்கப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x