Published : 03 Jan 2021 03:21 AM
Last Updated : 03 Jan 2021 03:21 AM

கரோனா தடுப்பூசி ஒத்திகையில் ஏற்பட்ட சிரமம், பிரச்சினை குறித்து மத்திய அரசுக்கு அறிக்கை: சுகாதாரத் துறை செயலர் ஜெ.ராதாகிருஷ்ணன் தகவல்

கரோனா தடுப்பூசி ஒத்திகையில் ஏற்பட்ட சிரமங்கள், பிரச்சினைகள் குறித்து மத்திய அரசுக்கு அறிக்கைசமர்ப்பிக்கப்படும் என்று சுகாதாரத் துறைச் செயலர் ஜெ.ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.

இந்தியாவில் கோவேக்சின் மற்றும் கோவிஷீல்டு தடுப்பூசிகளின் சோதனை இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது. விரைவில் தடுப்பூசிகளை பயன்பாட்டுக்குக் கொண்டுவர மத்திய அரசு முடிவு செய்துள்ளது. அதற்காக, நாடுமுழுவதும் தடுப்பூசி ஒத்திகை நடைபெறுகிறது.

தமிழகத்தில் சென்னை, திருவள்ளூர், கோவை, திருநெல்வேலி, நீலகிரி ஆகிய 5 மாவட்டங்களில் 17 இடங்களில் கரோனா தொற்று தடுப்பூசிக்கான ஒத்திகை நடந்தது. சென்னை அரசு பொது மருத்துவமனையில் நடைபெற்ற ஒத்திகையை சுகாதாரத் துறைச் செயலர்ஜெ.ராதாகிருஷ்ணன் ஆய்வு செய்தார். அப்போது, சென்னை மாநகராட்சி இணை ஆணையர் (சுகாதாரம்) திவ்யதர்ஷினி, பொது சுகாதாரத் துறை இயக்குநர் செல்வவிநாயகம், டீன் தேரணிராஜன் ஆகியோர் உடன் இருந்தனர்.

பின்னர், செய்தியாளர்களிடம் ராதாகிருஷ்ணன் கூறியதாவது:

தமிழகத்தில் 17 இடங்களில் ஒரேநேரத்தில் கரோனா தொற்று தடுப்பூசி ஒத்திகை நடைபெற்றுள்ளது. கரோனா தொற்று தடுப்பூசிக்கு 6 லட்சம் முன்களப் பணியாளர்கள் பதிவு செய்துள்ளனர். அவர்களில்5 லட்சம் முன்களப் பணியாளர்களுக்கு முதற்கட்டமாக தடுப்பூசி போட திட்டமிடப்பட்டுள்ளது.

முன்களப் பணியாளர்களைத் தொடர்ந்து நோயாளிகள், முதியோருக்கு தடுப்பூசி போடப்படும். தடுப்பூசி போடும் அறையை இன்னும் பெரிதாக்க வேண்டும் என ஒத்திகையில் தெரிந்தது. பதிவு செய்தவர்களின் விவரம் குறித்த ‘கோவின்’செயலி முறையாக செயல்படுகிறதா என்பதும் ஒத்திகையில் சரிபார்க்கப்பட்டது. ஒத்திகை மட்டுமேஎன்பதால் தடுப்பூசி போடவில்லை. தடுப்பூசி பயன்பாட்டுக்கு வந்தபின், 4 வார இடைவெளியில், 2முறை தடுப்பூசிகளைப் போட வேண்டும் என மத்திய அரசு அறிவுறுத்தி உள்ளது. தமிழகத்தில் 2.5கோடி தடுப்பூசியை வைப்பதற்கான குளிரூட்டப்பட்ட சேமிப்பு கிடங்குகள் தயாராக உள்ளன.

இன்றைய ஒத்திகையில் ஏற்பட்டசிரமங்கள், பிரச்சினைகள் குறித்துமத்திய அரசுக்கு அறிக்கை சமர்ப்பித்த பின், அவர்களின் அறிவுறுத்தல்படி பிற மாவட்டங்களில் ஒத்திகையை நடத்துவது குறித்து முடிவுசெய்யப்படும். கரோனா தொற்று தடுப்பூசி குறித்த சந்தேகங்களுக்கு பொதுமக்கள் 104 என்ற எண்ணைத் தொடர்பு கொள்ளலாம்.

இவ்வாறு, அவர் கூறினார்.

தடுப்பூசி எவ்வாறு போடப்படும்?

தடுப்பூசி போட்டுக் கொள்ள ‘கோவின்’ செயலியில் தங்கள் விவரங்களை பதிவு செய்து, ஒப்புதலைப் பெற்றிருக்க வேண்டும். தடுப்பூசிக்கான நாள், நேரம், இடம் ஆகியவைஅவர்களின் செல்போனுக்கு குறுஞ்செய்தி மூலம் தெரிவிக்கப்படும். அந்த மையத்துக்கு ஆதார் அட்டையுடன் செல்ல வேண்டும். தடுப்பூசிவளாகத்தில், வெப்ப பரிசோதனை செய்யப்படும். ஒவ்வொருவராகச் சென்று மருத்துவரிடம் ஆதார்அட்டை, செல்போன் குறுஞ்செய்தியை காண்பிக்க வேண்டும். உரியஅறிவுரைக்கு பின்னர் தடுப்பூசி போடப்படும்.

30 நிமிடங்கள் தங்கவைப்பு

தடுப்பூசி போட்டு கொண்டவர்கள், கண்காணிப்பு அறையில் 30 நிமிடங்கள் அமரவேண்டும். அவர்களின் ரத்த அழுத்தம் உள்ளிட்டசில பரிசோதனை மேற்கொள்ளப்படும். யாருக்காவது, மயக்கம் உள்ளிட்ட உடல் உபாதைகள் ஏற்பட்டால், உடனடியாக சிகிச்சை அளிக்கப்படும். எந்த உபாதையும் இல்லையென்றால் 30 நிமிடங்களுக்கு பின் வீட்டுக்குச் செல்லலாம்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x