

எழுத்தாளரும், திரைப்பட இயக்குநருமான இளவேனில் (70) மாரடைப்பால் சென்னையில் நேற்று காலமானார்.
தொடக்க காலத்தில் இடதுசாரி சிந்தனையாளராக அறியப்பட்ட இவர், பின்னர் முன்னாள்முதல்வர் கருணாநிதியுடன் நெருக்கமாக இருந்தார். ‘புயலுக்கு இசை வழங்கும் பேரியக்கம்’ உட்பட பல நூல்களை எழுதியுள்ளார். கருணாநிதியின் கதை, வசனத்தில் வெளியான ‘உளியின் ஓசை’ படத்தை இவர் இயக்கியுள்ளார். இந்நிலையில் அவருக்கு திடீரென நேற்று மாரடைப்பு ஏற்பட்டு காலமானார். சென்னை வடபழனியில் உள்ள இல்லத்தில் அவரது உடல் இன்று அஞ்சலிக்காக வைக்கப்படுகிறது. இதையடுத்து, இறுதி சடங்குகள் நடைபெறும் என அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.
இளவேனில் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில், “கருணாநிதிக்கு நெருக்கமான நண்பரும், கவிஞருமான இளவேனில் மறைவெய்தினார் என்ற துயரச் செய்திகேட்டு மிகுந்த வேதனையடைந்தேன். இலக்கிய உலகத்துக்கும்,திரையுலகத்துக்கும் பேரிழப்பாகியுள்ள அவரது மறைவால்வாடும் குடும்பத்தினருக்கும், சக நண்பர்களுக்கும் எனது ஆழ்ந்த அனுதாபத்தையும் ஆறுதலையும்தெரிவித்துக் கொள்கிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.