Last Updated : 02 Jan, 2021 07:16 PM

 

Published : 02 Jan 2021 07:16 PM
Last Updated : 02 Jan 2021 07:16 PM

தமிழகத்தில் முதல்கட்டமாக 1.60 கோடி பேருக்கு கரோனா தடுப்பூசி: சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தகவல்

கோவை

தமிழகத்தில் முதல்கட்டமாக 1.60 கோடி பேருக்கு கரோனா தடுப்பூசி வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகச் சுகாதாரத்துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர் தெரிவித்தார்.

கோவை இ.எஸ்.ஐ மருத்துவமனையில் இன்று நடைபெற்ற கரோனா தொற்றுக்கு எதிரான தடுப்பூசி முகாம் ஒத்திகை நிகழ்ச்சியை உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, சுகாதாரத்துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர் ஆகியோர் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

பின்னர் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி பேசுகையில், "தடுப்பூசி ஒத்திகை நிகழ்வில், ஊசி செலுத்தும்போதும், அதன் பிறகும் கடைப்பிடிக்க வேண்டிய செயல்பாடுகள் குறித்து மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் சுகாதாரப் பணியாளர்களுக்கு விளக்கம் அளிக்கப்பட்டது.

கோவையில் மாநகராட்சி சீத்தாலட்சுமி மருத்துவமனை, சூலூர் அரசு மருத்துவமனை, பூலுவபட்டி ஆரம்ப சுகாதார நிலையம் உள்ளிட்ட 5 இடங்களில் இந்த ஒத்திகை நடத்தப்பட்டுள்ளது. தடுப்பூசி அனைவருக்கும் இலவசமாக வழங்கப்படும் என்று அறிவித்த முதல் மாநிலம் தமிழகம்.

அதன்படி முதற்கட்டமாக சுகாதாரப் பணியாளர்கள், முன்களப் பணியாளர்கள், 50 வயதுக்கும் மேற்பட்டவர்கள், 50 வயதுக்குள் தொற்றா நோயினால் பாதிக்கப்பட்டவர்களுக்குத் தடுப்பூசி வழங்கப்பட உள்ளது" என்றார்.

பின்னர், அமைச்சர் சி.விஜயபாஸ்கர் பேசும்போது, “முதல்கட்டமாகத் தமிழக மக்கள்தொகையில் 20 சதவீத (1.60 கோடி) மக்களுக்குத் தடுப்பூசி வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. தடுப்பூசித் திட்டம் செயல்படுத்தும்போது ஏற்படும் சவால்களை அடையாளம் கண்டு, அதனை நிவர்த்தி செய்வதே இந்த ஒத்திகையின் நோக்கமாகும். இதற்காக 47,200 மையங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. 21,170 சுகாதாரப் பணியாளர்களுக்குத் தடுப்பூசி போடுவதற்காகப் பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் உள்ள அரசு மருத்துவமனைகள் மற்றும் தனியார் மருத்துவமனைகளில் பணிபுரியும் 6 லட்சம் மருத்துவர்கள், செவிலியர்கள், களப்பணியாளர்கள், அங்கன்வாடி பணியாளர்கள் மற்றும் மருத்துவமனையைச் சார்ந்த பணியாளர்களுக்கு முதற்கட்டமாகத் தடுப்பூசி வழங்கப்பட உள்ளது. ஒவ்வொரு தடுப்பூசி மையத்திலும் காத்திருப்போர் அறை, தடுப்பூசி வழங்கும் அறை, கண்காணிப்பு அறை என 3 பிரிவுகள் செயல்பட உள்ளன” என்றார்.

இந்த நிகழ்வில் மாவட்ட ஆட்சியர் கு.ராசாமணி, இ.எஸ்.ஐ மருத்துவமனையின் டீன் டாக்டர் நிர்மலா, கோவை அரசு மருத்துவமனையின் டீன் டாக்டர் காளிதாஸ், சுகாதாரத்துறை இணை இயக்குநர் ரமேஷ்குமார் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

கோவை இ.எஸ்.ஐ மருத்துவமனையில் நடைபெற்ற கரோனா தொற்றுக்கு எதிரான தடுப்பூசி முகாம் ஒத்திகை நிகழ்ச்சியைப் பார்வையிட்ட உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, சுகாதாரத்துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர் ஆகியோர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x