

துறைரீதியான விசாரணையின் போது விதிக்கப்படும் அபராதத் தொகைக்கு ஜிஎஸ்டி வசூலிக்க முடியாது என உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மதுரை அனுப்பானடியைச் சேர்ந்த ஓ.அழகர்சாமி, உயர் நீதிமன்றக் கிளையில் தாக்கல் செய்த மனு: சிவகங்கையில் டாஸ்மாக் மேற்பார்வையாளராக பணிபுரிந்து வருகிறேன்.
டாஸ்மாக் கடையில் மது விற்பனையில் கிடைக்கும் பணம் மறுநாள் வங்கியில் செலுத்தப்படுவது வழக்கம். கரோனா தொற்று காரணமாக மார்ச் 24 மாலை 6 மணிக்கு டாஸ்மாக் கடை மூடப்பட்டது. அன்று 4 மணி வரை மது விற்பனையில் கிடைத்த பணம் மறுநாள் வங்கியில் டெபாசிட் செய்யப்பட்டது.
மாலை 4 மணி முதல் 6 மணி வரையிலான விற்பனை பணம் பாதுகாப்பு பெட்டியில் வைக்கப்பட்டது. மறுநாள் டாஸ்மாக் கடைகளிலிருந்து மதுபானங்கள் பாதுகாப்பாக இடங்களுக்கு மாற்றப்பட்டது. அப்போது மதுபான இருப்பு சரிபார்க்கப்பட்டு 4 மணி முதல் 6 மணி வரையிலான பணம் வங்கியில் செலுத்தப்பட்டது.
அனைத்து மதுபான கடைகளிலும் அவ்வாறே நடைபெற்றது.
இந்நிலையில் மாலை 4 முதல் 6 வரையிலான பணத்துக்கு அபராதம், 24 சதவீத வட்டி, 18 சதவீத ஜிஎஸ்டி செலுத்த உத்தரவிடப்பட்டது. மேலும் அபராதத் தொகையில் 50 சதவீதத்தை செலுத்த உத்தரவிடப்பட்டுள்ளது. எனவே, அபராதத் தொகை, 24 சதவீத வட்டி மற்றும் 18 சதவீத ஜிஎஸ்டி செலுத்துமாறு பிறப்பித்த உத்தரவை ரத்து செய்ய வேண்டும். அந்த உத்தரவுக்கு இடைக்கால தடை விதிக்க வேண்டும்.
இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது.
இதேபோல் மதுரை, நெல்லை, திருச்சி, புதுக்கோட்டை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களிலிருந்து 61 பேர் மனு தாக்கல் செய்திருந்தனர்.
இந்த மனுக்கள் அனைத்தும் நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி முன்பு விசாரணைக்கு வந்தது. அழகர்சாமி தரப்பில் வழக்கறிஞர் ஆர்.வி.ராஜகுமார் வாதிடுகையில், மதுபானம் இருப்பு குறைவாக இருந்தால் முறைப்படி விசாரணை நடத்தி அபராதம் விதித்திருக்க வேண்டும். இங்கு முறைகேடு எதுவும் நடைபெறவில்லை. இருப்பினும் விசாரணை நடத்தாமல் அபராதம் விதித்துள்ளனர். மேலும் அபராதத் தொகைக்கு ஜிஎஸ்டி வசூலிக்க முடியாது என்றார்.
இதையடுத்து நீதிபதி பிறப்பித்த உத்தரவு:
துறைரீதியான விசாரணையின் போது விதிக்கப்படும் அபராதத் தொகைக்கு ஜிஎஸ்டி வசூலிக்க முடியாது. ஜிஎஸ்டி சட்டப்படி வர்த்தகம், வரி தொடர்பான அபராதத் தொகைக்கு மட்டுமே ஜிஎஸ்டி வசூலிக்க முடியும். துறைரீதியான அபராத தொகைக்கு ஜிஎஸ்டி வசூலிப்பது சட்டவிரோதம்.
மேலும் மனுதாரர்கள் மீதான குற்றச்சாட்டு குறித்து விசாரிக்காமல் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. எனவே மனுதாரர்களுக்கு அனுப்பிய நோட்டீஸ்கள் ரத்து செய்யப்படுகின்றன. மனுதாரர்கள் மீதான குற்றச்சாட்டுகள் குறித்து சட்டப்படி நடவடிக்கை எடுக்கலாம்.
இவ்வாறு நீதிபதி உத்தரவில் கூறியுள்ளார்.