Last Updated : 01 Jan, 2021 04:55 PM

 

Published : 01 Jan 2021 04:55 PM
Last Updated : 01 Jan 2021 04:55 PM

டெல்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவு: புத்தாண்டு தினத்தை கருப்பு தினமாக கடைபிடித்த கிராம மக்கள்

டெல்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவாக ஆங்கில புத்தாண்டு தினத்தை கருப்பு தினமாக விவசாயிகள் இன்று (ஜன. 1) கடைப்பிடித்தனர்.

தஞ்சாவூர் மாவட்டம் திருக்காட்டுப்பள்ளி அருகே முல்லைக்குடி கிராமத்தில் இன்று தமிழ்நாடு விவசாயிகள் சங்கம், விவசாயத் தொழிலாளர்கள் சங்கத்தைச் சேர்ந்த வெ.ஜீவக்குமார், பி.முருகேசன் ஆகியோரது தலைமையில் கிராம மக்கள் வயலில் இறங்கி போராட்டம் நடத்தினர்.

அப்போது, மத்திய அரசு இயற்றியுள்ள மூன்று வேளாண் சட்டங்களால் விவசாயிகள் பாதிக்கப்படும் நிலை உள்ளதால் அதனை திரும்ப பெற வேண்டும், டெல்லியில் கடந்த 37 நாட்களாக போராடும் விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவித்து வழக்கமாக புத்தாண்டை சிறப்பாக கொண்டாடுவதை தவிர்த்து கருப்பு தினமாக கடைப்பிடிக்கப்படுவதாக கூறி மத்திய அரசை கண்டித்து முழக்கங்களை எழுப்பினர்.

உறுதிமொழி ஏற்பு

"அகில இந்திய விவசாயிகள் போராட்ட ஒருங்கிணைப்புக் குழு சார்பில், மத்திய அரசு கொண்டு வந்துள்ள 3 வேளாண் சட்டங்களை திரும்பப் பெறும்வரை போராட்டத்தை தீவிரப்படுத்த வேண்டும். அம்பானி, அதானி உள்ளிட்ட கார்ப்பரேட் நிறுவன பொருட்களை புறக்கணிப்போம். விவசாயத்தை பாதுகாப்போம், இந்தியாவை பாதுகாப்போம். டெல்லியில் உயிர் நீத்த தியாகிகள், விவசாயிகள் சார்பில் நாடு முழுவதும் போராட்டத்தை தீவிரப்படுத்துவது" என உறுதிமொழி எடுக்கப்பட்டது.

தஞ்சாவூர் ரயிலடியில் அகில இந்திய விவசாயிகள் போராட்ட ஒருங்கிணைப்புக் குழு சார்பில், மத்திய அரசு கொண்டு வந்துள்ள 3 வேளாண் சட்டங்களை திரும்பப் பெறும்வரை போராட்டத்தை தீவிரப்படுத்த வேண்டும் என உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.

தஞ்சாவூரில் இன்று நடைபெற்ற நிகழ்ச்சிக்கு ஒருங்கிணைப்பு குழு உறுப்பினர் பி.செந்தில்குமார் தலைமை வகித்தார். தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாநில செயலாளர் சாமி.நடராஜன் நிறைவுரை ஆற்றினார்.

இதே போல் பட்டுக்கோட்டை, பூதலூர் உள்ளிட்ட மாவட்டத்தின் பல இடங்களிலும் உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சிகள் நடைபெற்றது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x