

காற்றின் திசைவேக மாறுபாடு காரணமாக தமிழகத்தில் தமிழக கடலோர மாவட்டங்களில் ஜன.5 அன்று கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக்குறிப்பு வருமாறு:
“காற்றின் திசை வேக மாறுபாடு காரணமாக தமிழகத்தில் அடுத்த 24 மணிநேரத்திற்கு தென் தமிழக கடலோர மாவட்டங்கள் மற்றும், காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசான மழையும், ஏனைய மாவட்டங்களில் பெரும்பாலும் வறண்ட வானிலையும் நிலவும்.
ஜன.02 கடலோர மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும், ஏனைய மாவட்டங்களில் பெரும்பாலும் வறண்ட வானிலையும் நிலவும்.
ஜன.03 கடலோர மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன்கூடிய லேசானது முதல் மிதமான மழையும், ஏனைய மாவட்டங்களில் பெரும்பாலும் வறண்ட வானிலையும் நிலவும்.
ஜன.04 தென் தமிழக மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன்கூடிய லேசானது முதல் மிதமான மழையும், ஏனைய மாவட்டங்களில் வறண்ட வானிலை நிலவும்.
ஜன.05 தமிழகம் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும், கடலோர மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடிமின்னலுடன் கூடிய கன மழையும் பெய்யக்கூடும்.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளைப் பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 30 டிகிரி செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 23 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கும்.
கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்ச மழைபெய்த விவரம்:
பாபநாசம் (திருநெல்வேலி ) 9 செ.மீ, அம்பாசமுத்திரம் (திருநெல்வேலி) 8 செ.மீ, சமயபுரம் (திருச்சிராப்பள்ளி), மணிமுத்தாறு (திருநெல்வேலி), மண்டபம் (ராமநாதபுரம்) தலா 7 செ.மீ, குன்னூர் (நீலகிரி) , குடவாசல் (திருவாரூர்), நத்தம் தானியங்கி மழைமானி (திண்டுக்கல்) தலா 6 செ.மீ, விராலிமலை (புதுக்கோட்டை), பூதலூர் (தஞ்சாவூர்), பாம்பன் (ராமநாதபுரம்), கொடுமுடி (ஈரோடு), ராமேஸ்வரம் தலா 5 செ.மீ.
மீனவர்களுக்கான எச்சரிக்கை :
ஜனவரி 01 குமரிக்கடல் பகுதிகளில் பலத்த காற்று மணிக்கு 40 முதல் 50 கி.மீ. வேகத்தில் வீசக்கூடும்.
மீனவர்கள் மேற்கூறிய பகுதிகளுக்கு எச்சரிக்கையுடன் செல்ல அறிவுறுத்தப்படுகிறார்கள்”.
இவ்வாறு வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.