Published : 01 Jan 2021 12:41 PM
Last Updated : 01 Jan 2021 12:41 PM

ஜன.2 முதல் கரோனா தடுப்பூசி ஒத்திகை: தமிழகத்தில் 11 இடங்களில் நடக்கிறது

சென்னை

கரோனா தடுப்பூசி ஒத்திகை தமிழகத்தில் நாளை (ஜன.2) முதல் தொடங்குகிறது. தமிழகத்தில் 11 இடங்களில் இந்த ஒத்திகை நடக்க உள்ளதாக மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

கரோனா தொற்று கடந்த ஆண்டு பிப்ரவரி மாதத்தில் இந்தியாவில் பரவ தொடங்கியது. மார்ச்.25-ம் தேதி முதல் அரசு நாடு முழுவதும் ஊரடங்கை அமல்படுத்தியது. இந்தியாவில் கரோனா தொற்று வேகமாக பல மாநிலங்களில் பரவியது. தமிழகத்திலும் கரோனா தொற்று வேகமாக பரவியது.

அரசு எடுத்த நடவடிக்கை காரணமாக கரோனா தொற்று பாதிப்பு படிப்படியாக குறைக்கப்பட்டு வருகிறது. ஆனாலும் உருமாற்றம் அடைந்த கரோனா வைரஸ் வேறு வகையில் பரவி வருகிறது. ஒருபக்கம் தடுப்பு நடவடிக்கை எடுக்கப்பட்டுவரும் வேளையில் மறுபுறம் அதற்கான தடுப்பூசி கண்டுபிடிக்கும் பணியில் உலக நாடுகள் வேகமாக முயன்று வருகின்றன.

இதில் இந்தியா குறிப்பிடத்தக்க வெற்றியை அடைந்துள்ளது. ஜனவரிமுதல் நாடு முழுவதும் தடுப்பூசிகள் இலவசமாக மக்களுக்கு போடப்படும் என சமீபத்தில் முதல்வர் அறிவித்தார். தடுப்பூசி போடுவதற்காக தன்னார்வளர்களுக்கு பயிற்சியும் வழங்கப்படுகிறது.

முதற்கட்டமாக நாடுமுழுவதும் தடுப்பூசி ஒத்திகை முகாம்கள் நடக்கிறது. தமிழகத்தில் நாளைமுதல் இந்த ஒத்திகை முகாம்கள் தொடங்குகிறது. தமிழகத்தில் 11 இடங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளன.

சென்னை ராஜிவ்காந்தி மருத்துவமனை, ஈக்காட்டுத்தாங்கல், சாந்தோம் சுகாதார நிலையங்கள், பூந்தமல்லி அரசு மருத்துவமனை, நேமம் சுகாதார நிலையம், நீலகிரி மாவட்டம் குன்னூர் அரசு மருத்துவமனை, உதகை மருத்துவக் கல்லூரி, நெல்லக்கோட்டை சுகாதார நிலையம், நெல்லை மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, ரெட்டியார்பட்டி, சமாதானபுரம் சுகாதார நிலையங்கள் ஆகிய 11 இடங்களில் நாளை ஒத்திகை நடைபெறுகிறது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x