Published : 31 Dec 2020 07:19 PM
Last Updated : 31 Dec 2020 07:19 PM

உயிர்த்தெழுவார் என்கிற நம்பிக்கை: திண்டுக்கல் அருகே பெண் போலீஸ் பிணத்தை 22 நாட்கள் வீட்டில் வைத்திருந்த குடும்பத்தார்; போலீஸ் விசாரணை

திண்டுக்கல்

திண்டுக்கல்லில் இறந்த பெண் போலீஸ்காரர் அன்னைஇந்திரா மீண்டும் உயிர்தெழுவார் என்ற நம்பிக்கையில், வீட்டில் உடலுடன் காத்திருந்த உறவினர்களிடம் போலீஸார் விசாரணை நடத்திவருகின்றனர்.

திண்டுக்கல் அருகே நந்தவனம்பட்டி டிரசரி காலனியைச் சேர்ந்தவர் அன்னை இந்திரா(38). இவர், திண்டுக்கல் அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் போலீஸாக பணிபுரிந்து வந்தார். இவரது கணவர் பால்ராஜ். இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். கருத்துவேறுபாடு காரணமாக சில வருடங்களாக கணவன், மனைவி இருவரும் பிரிந்து வாழ்ந்துவந்தனர்.

அன்னை இந்திராவிற்கு அடிக்கடி உடல்நல பாதிப்பு ஏற்பட்டு வந்துள்ளது. இவருடன் அக்கா வாசுகி, இவர்களது குடும்ப நண்பர் சுதர்சனம் ஆகியோர் வசித்து வந்துள்ளனர்.

இந்நிலையில் கடந்த அக்டோபர் 16 ம் தேதி முதல் அன்னை இந்திரா உடல்நிலை சரியில்லாததால் மருத்துவ விடுப்பில் சென்றார். மருத்துவ விடுப்பு முடிந்து டிசம்பர் 25 ம் தேதி மீண்டும் பணிக்குத் திரும்பியிருக்க வேண்டும். ஆனால் இன்று வரை பணிக்கு வரவில்லை.

இதனால் அன்னைஇந்திரா வின் நிலை குறித்து அறிந்துவர இரண்டு பெண் போலீஸாரை அவரது வீட்டிற்கு போலீஸ் அதிகாரிகள் அனுப்பிவைத்தனர்.

வீட்டின் உள்பக்க கதவு பூட்டப்பட்டிருந்த நிலையில், உள்ளிருந்து துர்நாற்றம் வீசியுள்ளது. சந்தேகமடைந்த அங்கு சென்ற பெண் போலீஸார் தங்கள் அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தனர். தாடிக்கொம்பு போலீஸார் சம்பவ இடத்திற்குச் சென்று விசாரணை நடத்தினர்.

வீட்டினுள் நுழைந்து பார்த்தபோது, அன்னை இந்திராவின் உடல் அழுகிய நிலையில் துணியால் சுற்றப்பட்டு இருந்தது. அருகில் அவரது அக்கா வாசுகி, குடும்ப நண்பர் சுதர்சனம், அன்னை இந்திராவின் இரண்டு குழந்தைகள் ஆகியோர் இருந்துள்ளனர்.

இவர்களை காவல்நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தியதில் உடல்நிலை பாதிக்கப்பட்டு அன்னை இந்திரா இறந்து விட்டதாகவும், அவர் மீண்டும் உயிர்தெழுவார் என்ற நம்பிக்கையில் தினமும் பிரார்த்தனை செய்து வருவதாகவும் தெரிவித்துள்ளனர்.

இது போலீஸாருக்கு அதிர்ச்சியை தந்தது. இறந்து சில தினங்கள் ஆகிய நிலையில் உடல் அழுகியிருந்ததால், அதே இடத்தில் பிரேதப் பரிசோதனை நடந்தது. இது குறித்து தாடிக்கொம்பு போலீஸார் வழக்குப்பதிவு செய்து தொடர்ந்து விசாரணை நடத்திவருகின்றனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x