Published : 31 Dec 2020 04:21 PM
Last Updated : 31 Dec 2020 04:21 PM

கோயில் நிலங்களை ஆக்கிரமிப்பாளர்களுக்குப் பட்டா போடுவதைத் தடுக்கக் கோரி வழக்கு: அரசுக்கு உயர் நீதிமன்றம் நோட்டீஸ்

நாமக்கல், திருச்செங்கோட்டில் உள்ள ஒரு கோயில், தருமபுரியில் உள்ள ஒரு கோயிலின் இடங்களை ஆக்கிரமிப்பாளர்களுக்கே அரசு பட்டா போட்டுத் தருகிறது. அதைத் தடுக்கவேண்டும் எனக் கோரி தொடரப்பட்ட வழக்கில் தமிழக அரசு பதிலளிக்க உயர் நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோட்டில் உள்ள அர்த்த நாரீசுவரர் கோயில் அமைந்துள்ள மலை அடிவாரத்தைச் சுற்றி அமைந்துள்ள கோயில் நிலங்கள் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளதாகக் கூறி, சேலம் ஏ. ராதாகிருஷ்ணன் என்பவர் உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு ஒன்றைத் தாக்கல் செய்துள்ளார்.

அவரது மனுவில், “கோயிலைச் சுற்றியுள்ள கோயிலுக்குச் சொந்தமான நிலங்களை ஆக்கிரமித்துள்ளவர்களுக்குப் பட்டா வழங்க அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. மேலும், மலை அடிவாரத்தில் உள்ள நீர் நிலைகளில் சாயப்பட்டறை கழிவுநீர் கலந்து, பொதுமக்களின் ஆரோக்கியத்துக்குக் கேடு ஏற்பட்டுள்ளது.

மலையடி வாரத்தில் சட்டவிரோதக் கட்டுமானங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. சட்டவிரோதமாக ஆழ்துளைக் கிணறுகள் அமைக்கப்பட்டுள்ளன. இது தொடர்பாக 2018-ம் ஆண்டே மனு அனுப்பியும் அதிகாரிகள் எந்த நடவடிக்கையும் எடுக்காததால் தனது மனுவைப் பரிசீலித்து நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும். ஆக்கிரமிப்பாளர்களுக்குப் பட்டா வழங்கத் தடை விதிக்க வேண்டும்” எனக் கோரிக்கை விடுத்துள்ளார்.

இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் மகாதேவன் மற்றும் அனிதா சுமந்த் அடங்கிய அமர்வு, இரண்டு வாரங்களில் பதிலளிக்க தமிழக அரசுக்கு உத்தரவிட்டு, விசாரணையைத் தள்ளிவைத்தனர்.

இதேபோன்று தருமபுரி மாவட்டம் அன்னசாகரத்தில் உள்ள விநாயகர் - சுப்ரமணிய சாமி கோயிலின் நிலங்கள் தனியாருக்கு வீட்டுமனைப் பட்டாவாக மாற்றம் செய்யப்படுவதாகவும், அதற்குத் தடைவிதிக்கக் கோரியும் ராமகோட்டையைச் சேர்ந்த மாயக்கண்ணன் என்பவர் வழக்குத் தொடர்ந்துள்ளார்.

அன்னசாகரத்தைச் சேர்ந்த கோபு என்பவருக்கு விற்பனை செய்துள்ளதாகவும், வருவாய்த்துறை ஆவணங்களில் மாற்றம் செய்யத் தடை விதிக்கவும் மனுவில் கோரிக்கை வைத்துள்ளார்.

இந்த வழக்கிலும் தமிழக அரசும், இந்து சமய அறநிலையத்துறையும் இரண்டு வாரங்களில் பதிலளிக்க நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x